தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரக போக்குவரத்து துணை ஆணையர் செ.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் அனைத்து வகை வாகனங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 8,661 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு 1, 275 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டது. இது தொடர்பாக ரூபாய் 15 லட்சத்து 78 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் வசூலிக்கப்பட வேண்டிய அபராத தொகையாக ரூ16 லட்சத்து12 ஆயிரத்து 600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு முறையாக வரி கட்டாமல் இயக்கப்பட்ட சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், மேக்சி கேப், ஜேசிபி வாகனங்கள் மற்றும் கார் உரிமையாளர்களிடம் இருந்து சாலை வரியாக ரூபாய் 8 லட்சத்து 97 ஆயிரத்து 755 வசூலிக்கப்பட்டது. மேலும், அதிக ஆட்களை ஏற்றிச் சென்றதாக 126 வாகனங்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாத 340 வாகன ஓட்டிகள், காப்புச் சான்று இல்லாத 259 வாகனங்கள், கண் கூசும் வகையான முகப்பு விளக்கை பொருத்திய 103 வாகனங்கள், ஒளிரும் சிவப்பு பிரதிபலிக்கும் நாடா இல்லாத 165 வாகனங்கள், தகுதிச் சான்று இல்லாத 131 அனைத்துவகை வாகனங்களுக்கும் தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. பல்வேறு குற்றங்களுக்காக 198 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டன. தஞ்சாவூர் சரகத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 39 வாகன ஓட்டிகள், தலைக்கவசம் அணியாமல் வாகனம் இயக்கிய 145 வாகன ஓட்டிகள், கைபேசியில் பேசியபடி வாகனங்கள் இயக்கிய 15 வாகன ஓட்டிகள், சீட் பெல்ட் அணியாமல் வாகனங்கள் இயக்கிய 203 வாகன ஓட்டிகள் மற்றும் அதிக எடை ஏற்றி இயக்கிய 98 வாகன ஓட்டிகளுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டன” என அதில் கூறப்பட்டுள்ளது.