பிரேசில் நாட்டின் முக்கிய நகரான ரியோ டி ஜெனிரோவில் உலகத் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மகளிர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வளரிவான் 251.7 புள்ளிகள் பெற்றுத் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். ஜூனியர் பிரிவில் மட்டுமே பதக்க வேட்டை நிகழ்த்தி வந்த 20 வயதாகும் இளவேனில், தற்போது சீனியர் பிரிவிலும் முதல்முறையாகத் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். சீனியர் பிரிவில் தங்க மங்கைகளான அபூர்வி சண்டேலா, அஞ்சலி பக்வத் ஆகியோருக்குப் பிறகு உலக துப்பாக்கிச் சுடுதல் தொடரில் தங்கம் வெல்லும் 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை இளவேனில் பெற்றுள்ளார். தமிழ்நாட்டின் கடற்கரையோர மாவட்ட மான கடலூரில் பிறந்த இளவேனில் 2 வயதில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்குக் குடிபெயர்ந்து தற்போது அங்கு வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.