tamilnadu

img

இது கதையல்ல... நிஜம்! -சி.ஸ்ரீராமுலு

“வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் மிக மோசமான வறுமையில் பிறந்திருக்கிறார்கள், பிறக்கிறார்கள். விபத்து, இயற்கை பேரழிவுகள், உணர்ச்சி ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புக்குள்ளான சம்பவங்கள் ஏராளம். இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஒரு சிலரால் மட்டுமே சாதிக்க முடிகிறது. அத்தகையோரில் ஒருவர்தான் இந்த இளம் வீராங்கனை”. வாய்ப்பு என்பது ஒரு முறைதான் கிடைக்கும் அதை பயன்படுத்திக் கொள்வது அவரவரது திறமையைப் பொறுத்தது என்று மிக சுலபமாக சொல்லி விடுவார்கள். அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்த குஷ்பீர் கவுர் தனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது மிகப் பெரிய போராட்டத்திற்கு பின்னர் கடந்து வந்த பாதை  அவருக்கும் அவரது குடும்பத்தினரின் கண்களிலுல் தெரியும்.

இவரால் நாட்டிற்கு பெருமை!

கடந்த மாதம் தனது பிறந்தநாளை கொண்டாடிய குஷ்பீர் கவுருக்கு வயது 26. தென் கொரியாவில் 2014 ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 20 கிலோ மீட்டர் நடை ஓட்டப் பந்தய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று விளையாட்டு உலகில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்தார். 2012 ஆம் ஆண்டு கொழும்பு நகரில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 கிலோ மீட்டர் நடை ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2013 ஆம் ஆண்டு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கத்தை வெல்ல முடியவில்லை என்றாலும் தனது முந்தைய சாதனையை முறியடிக்க முடிந்தது. 2016ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று பெருமை சேர்த்தார். கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும் கலந்து கொண்டு 20 கிலோ மீட்டர் நடை பயணத்தில் இலக்கை ஒரு மணி நேரம் 39 நிமிடம் 23 விநாடிகளில் கடந்த பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.\

இரும்புப் பெண்மணி!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை அடுத்தது சின்னஞ்சிறு கிராமமான நிக்கா ரசல்பூர். அவருக்கு 3 சகோதரிகள், ஒரு சகோதரன். ஆறு வயதில் தந்தையை இழந்தவர் குஷ்பீர் கவுர். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. தந்தை பால்கார் சிங்கை இழந்தபோது ஆதரவுக்கு ஒருவரும் இல்லை. தாய் ஜஸ்பீர் குடும்ப பாரத்தை சுமந்தார். தனது ஐந்து குழந்தைகளையும் படிக்க வைத்து சமூகத்தில் நல்ல அந்தஸ்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்த ஜஸ்பீர் கவுரின் கணவர் வீட்டில் இருந்து எந்த வித ஆதரவும் கிடைக்கவில்லை.  சில சமயங்களில் இரண்டு வேளை உணவுக்கு கூட வழியின்றி பரிதவித்தனர். ஆனாலும், மனம் தளரவில்லை. தனது வாழ்க்கையில் பெரும் போராட்டத்தை எதிர் கொண்டதால், குழந்தைகளும் அதே வழியில் செல்ல விரும்பவில்லை. கல்வி மட்டுமல்ல, விளையாட்டிலும் பங்கேற்க ஊக்கு வித்தார்.  குழந்தைகளை வளர்த்து எடுப்பதில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டதால், தன்னிடம் இருந்த ஓரிரு மாடுகளின் பாலைக் கறந்து விற்பனை செய்து வந்தார். துணிகளைத் தைத்தும் அதில் கிடைத்த சொற்ப வருமானத்தைக் கொண்டும் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டாலும் மகளை விளையாட்டுத்துறையில் சேர்த்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். இவர்களது குடும்ப வறுமையை புரிந்துகொண்ட பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளின் கல்வி கட்டணத்திற்கு உதவி செய்தனர். மூத்த மகள் குஷ்பீர்  பதக்கம் வென்றார். மற்ற  மூன்று மகள்களும் ஆர்வலர்கள். மகன் பிக்ரம்ஜித் சிங் நாட்டுக்காக பணியாற்ற இந்திய ராணுவத்தில் சேர விரும்புகிறார்.

போராட்டமே வாழ்க்கை!
குழந்தைப் பருவத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம் ஏராளம். ‘ஒண்டக்கூட குடிசை இல்லாத’ வறுமையிலும் ஓடத் துவங்கிய குஷ்பீர் உள்ளூரில் போட்டிகளில் பரிசுகளை குவித்தார். அவரது ஓட்டத்தை பார்த்து இந்திய தடகள வீரர்கள் கொடுத்த உற்சாகம் தேசிய அளவில் பதக்கங்களை வெல்ல முடிந்தது. படிப்படியாக சர்வதேச போட்டிகளிலும் கால் பதித்து பதக்கம் வென்றபோது, அவர் படித்த கல்லூரி நிர்வாகம் 5 லட்சம் ரூபாயை பரிசுத் தொகையாக அறிவித்து விளம்பரத்தை தேடிக்கொண்டது.  அதை நம்பிய அந்தக் குடும்பம் தங்களுக்கென்று சொந்தமாக ஒரு ‘வீடு’ கட்டுவதற்கு “வானமே கூரையான”குடிசையை காலி செய்தது. சொன்னபடி அந்த கல்லூரி நிர்வாகம் பணம் வழங்காததால் மழையிலும் வெயிலிலும் வானமே கூரையான மாட்டு கொட்டகையின் ஒரு பக்கம் மாடுகளும், மறுபக்கம் அம்மா, தம்பி தங்கைகளுடன் வசித்து வரும் பரிதாபம் இவரது குடும்பத்திற்கு ஏற்பட்டது.

குஷ்பீரின் சேவை, அர்ப்பணிப்பு உழைப்பை பாராட்டி 2017 ஆம் ஆண்டில் அர்ஜூனா விருது அவருக்கு வழங்கப்பட்டது. அவரது குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு பஞ்சாப் காவல்துறையில் டி.எஸ்.பி. பணியும் வழங்கப்பட்டது. காவல்துறை பணியின் மூலம் கிடைத்த வருமானத்திலிருந்து, கசிந்த கூரையுடன் ஒரு சிறிய வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு  மாட்டுக் கொட்டகை ‘சிமெண்ட் கூரையாக’ மாறியதால் சகோதரிகள் ஹர்ஜித், கரம் ஜித், தரம்ஜித், சகோதரர் பிக்ரம் சிங், அம்மா ஜஸ்பீர் கவுருக்வுக்கும் ஒரு வேளை நல்ல உணவும் கிடைத்து வருகிறது.  கடந்த ஒலிம்பிக்கில் தேசத்தின் பெருமையை காப்பாற்றிய குஷ்பீர் கவுர் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல அனைவரும் வாழ்த்துவோம்!