லண்டன்
3 டெஸ்ட், 3 டி-20 என 2 விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற, 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் நிறைவு பெற்றது.
இந்நிலையில், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சவுதாம்ப்டன் நகரில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. மிடில் ஆர்டர் வீரர் ஜாக் கிராவ்ளினின் (267) அசத்தலான இரட்டை சதத்தின் உதவியால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 583 ரன்கள் குவித்து செய்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சனின் (5 விக்.,) பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 273 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் பெற்றது.
பின்னர் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 4-ஆம் நாளின் மதிய உணவு இடைவேளை முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் (18 ஓவர்கள்) எடுத்துள்ளது. மஸூத் (13), அபித் அலி (22) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இன்னும் ஒன்றரை நாட்கள் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளித்தால் தான் பாகிஸ்தான் அணி போட்டியை டிரா செய்ய முடியும். எனினும் இங்கிலாந்து அணிக்கு 90% வெற்றி வாய்ப்பு உள்ளது.