நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு அடுத்து மிகப்பெரிய விருதாகக் கருதப்படுவது பத்ம விபூஷன் விருது ஆகும்.இந்த விருதை விளையாட்டுத் துறையில் பெறுபவர்கள் மிகக் குறைவு. இதுவரை 3 நபர்கள் பத்மவிபூஷன் (சச்சின், விஸ்வநாதன் ஆனந்த், எட்மண்டு ஹிலாரி (நியூஸி)) பெற்றுள்ள நிலையில், 4-வது நபராக மேரிகோம் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்ம விபூஷன்
2020-ஆம் ஆண்டுக்கான பத்மவிபூஷன் விருதுக்கு உலக குத்துச்சண்டை தொடரில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் பெயரை மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. பத்மவிபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப் பட்ட முதல் விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையையும், இந்த விருதைவென்றால் விளையாட்டு துறை சார்பில் பத்ம விபூஷன் விருது பெரும் 4-வது நபர் என்ற சிறப்பு பெருமையை மேரிகோம் பெறுவார். ஏற்கனவே 2013-ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதையும், 2006-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் மேரிகோம் பெற்று இருந்தார்.
பத்மபூஷன்
உலக பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்த பிவி.சிந்து பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். சிந்து 2015-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வென்றிருந்தார்.
பத்மஸ்ரீ
பத்மஸ்ரீ விருதுக்கு வினேஷ் போஹத் (மல்யுத்தம்), ஹர்மன்பிரீத் கவுர் (கிரிக்கெட்) ராணி ராம்பால் (ஹாக்கி), சுமா ஷிரு (துப்பாக்கி சுடுதல்), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), தஷி மற்றும் நுங்ஷி மாலிக் (மலையேறுதல்) ஆகிய 7 பேர் பத்மஸ்ரீ விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். பத்ம விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட வர்களின் இறுதி பெயர் விவரங்களை ஜனவரி 25-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கும். மத்திய விளை யாட்டு அமைச்சகம் பத்ம விருதுக்குப் பரிந்துரைத்த 9 பேரும் வீராங்கனைகள் ஆவார். ஆடவர் பெயரில் ஒருவர் பெயர் கூட பத்ம விருதுக்கு பரிந்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.