tamilnadu

img

விவசாயிகளுக்கு சாதி பெயர் குறிபிட்டு சம்மன் : ED மீது காவல் நிலையத்தில் புகார்!

சேலத்தில் சாதி பெயரை குறிப்பிட்டு அப்பாவி விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். இவர்களின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பாஜகவின் சேலம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குணசேகரன் என்பவர் தொடர்ந்து அச்சுறுத்தி, கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில், விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணனுக்கு கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறையில் இருந்து சம்மன் ஒன்று வந்துள்ளது. சம்மனில் அவர்களின் சாதி பெயரை குறிப்பிட்டு, சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதையடுத்து பதற்றமடைந்த இருவரும், தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகங்களை எடுத்துக் கொண்டு, சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆஜராகி உள்ளனர். அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் விவசாயிகள் இருவரும் மிரட்டி துன்புறுத்தியதாக தெரிகிறது. 
இது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அமலாக்கத் துறை மீது வழக்கறிஞர் பிரவீனா என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது விசாரணை நடத்த நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு டிஜிபி உத்தரவிட்டார். அதன் பேரில், முதற்கட்டமாக, விவசாயிகளுக்கு ஆதரவாக புகார் அளித்த பெண் வழக்கறிஞரான பிரவினாவிடம் நேற்று மாலை விசாரணை தொடங்கப்பட்டது.  
இந்த விசாரணையில் ஏழை விவசாயிகளுக்கு ஜாதி பெயரை கூறி அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை போலீசாரிடம் அளித்து, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார் பிரவினா. இதை தொடர்ந்து, விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் இந்த செயல்பாட்டுக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.