tamilnadu

img

காவிரி - சரபங்கா நீரேற்று திட்டப் பணிகளை நிறுத்தி வைத்திடுக... மார்ச் 2-ல் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம்....

மேட்டூர் அணையிலிருந்து உபரிநீரை சேலம் மாவட்டத்திற்கு பயன்படுத்தும் வகையில் காவிரி - சரபங்கா நீரேற்று திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. 565 கோடி ரூபாய் செலவில் குழாய்கள் மூலம் சுமார் 100 ஏரிகளுக்கு நீர்நிரப்பும் திட்டம் இது. விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களில் குழாய் பதிக்கக்கூடாது. ஏற்கனவே உள்ள நீர்வழிப்பாதை வழியாக திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது. 

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவசர கதியில் பிப்ரவரி 26 அன்றுஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளார். இது சேலம் மாவட்ட மக்களை ஏமாற்றும் செயல்என்பதில் சந்தேகமில்லை. 120 கிலோ மீட்டர்நிறைவேற்ற வேண்டிய பணிகளில் பத்துகிலோ மீட்டருக்குக் கூட பணிகள் நிறைவடையவில்லை. மற்றொன்று, மேட்டூர் அணையில் 120 அடி நீர் தேங்கிய பிறகு அதற்கு மேல்வரும் உபரிநீரை பயன்படுத்தும் வகையில்தான் திட்டத்தின் நோக்கமாக அரசு அறிவித்தது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடிதான் உள்ளது. இந்த நிலையில், மேட்டூர் அணைக்குள் இருந்து தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி இத்திட்டத்திற்கான கிணற்றுக்குள் விட்டு குழாய் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் இத்தகைய செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இது காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகமாகும். உபரி நீர் திட்டம் என்று அறிவித்துவிட்டு உரிமையான நீரை எடுத்திருப்பதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக மிகமோசமான செயலில் ஈடுபடவும் தயங்காதவர் முதலமைச்சர் பழனிசாமி என்பதற்கு இது உதாரணமாகும். தவறான செயலுக்குமுதலமைச்சரே முன் நின்று துணை போயிருப்பதை அனைவரும் கண்டிக்க முன்வர வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. 

இத்தகைய தவறான செயலுக்காக தமிழக முதலமைச்சர் வருத்தம் தெரிவிப்பதுடன், காவிரி - சரபங்கா நீரேற்று திட்டப்பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி மார்ச் 2 ஆம் தேதிநாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றிய தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். பாரம்பரிய பாசன உரிமையைப் பாதுகாக்க நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை யிலிருந்து...

;