tamilnadu

img

சட்டப்பேரவை கூட்டம் இடம் மாறுமா?

சென்னை:
கொரோனா பரவல் தொடர்ந்து நீடிப்பதால், அடுத்த மாதம் கூட்டப்பட வேண்டிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை வேறிடத்துக்கு மாற்றலாமா? என்பது பற்றி உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. பேரவை விதிகளின்படி, கூட்டத் தொடர் 6 மாத இடைவெளியில் கூட்டப்பட வேண்டும். அதன்படி, வரும் செப்டம்பர் 23 ஆம் தேதிக்குள் மீண்டும் சட்டப்பேரவை கூட்ட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

இம்மாதம் ஆகஸ்டு 31ஆம் தேதிவரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதோடு, தனிமனித இடைவெளி, முகக்கவசம் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதத்திலும் ஊரடங்கு நீடிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஊரடங்கு நீடிக்கவில்லை என்றாலும், முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்றவை கண்டிப்பாக நீடிக்கப்படும்.எனவே, தற்போது சட்டப்பேரவையில் தனிமனித இடைவெளியை அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பின்பற்ற வேண்டியதிருக்கும். இதனால் அங்கு அனைவருமே அமர இடமில்லாமல் போய்விடும்.எனவே, சட்டப்பேரவை கூட்டத்தை வேறிடத்தில் நடத்தலாமா? அதற்கு சென்னையில் எது உகந்த இடம் என்பது பற்றி உயர் அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை மேற்கொள் ளப்படுகிறது.

இதில், சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபமும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.கடந்த காலங்களில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வெவ்வேறு இடங்களில் நடந்துள்ளன. 1921-1937 ஆம் ஆண்டுகளில் சென்னை கோட்டையின் மேலவை மண்டபத்தில்  கூட்டப்பட்டது.பின்னர் சேப்பாக்கத்தில் உள்ள செனட் மண்டபம், அரசினர் தோட்ட விருந்தினர் மாளிகை, சென்னை கோட்டை பேரவை மண் டபம், கலைவாணர் அரங்கம், உதகமண்டலம் அரண்மூர் மாளிகை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த புதிய தலைமைச் செயலக வளாகம் உள்ளிட்ட இடங்களில் தமிழக சட்டப்பேரவை கூட்டப்பட்டுள்ளது.

;