tamilnadu

img

முழு கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

சென்னை:
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணத்தையும் வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.கொரோனா நோய்பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு  கடந்த ஏப்ரல் 20ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேசமயம், ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், நடப்பு கல்வி ஆண்டிற்கான கட்டணம் இன்னும் இறுதி செய்யப்படாததால், சென்ற ஆண்டு வசூலித்த கட்டணத்தின் அடிப்படையில், தமிழகம் முழுதுமுள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் 2020 - 2021 ம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்த்தில் 40 சதவீத தொகையை ஆகஸ்ட் 31 க்குள் வசூலித்துகொள்ளலாம் எனவும், மீதமுள்ள 35 சதவீத தொகையை பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்களுக்குள் வசூலித்துக்கொள்ளவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, பள்ளிகள் முழு கட்டணத்தையும் மாணவர்களிடம் இருந்து  வசூலிப்பதாக, தமிழக அரசு சார்பாக அரசு வழக்கறிஞர் அன்னலட்சுமி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் முறையிட்டார்.இதைக் கேட்ட நீதிபதி, எந்தெந்த பள்ளிகளுக்கு கட்டணம் வசூலிக்கிறது என்று ஆகஸ்ட் 17ம் தேதி  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், பள்ளிகள் முழு கட்டணத்தை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  நீதிபதி ஆனந்த் வெங் கடேஷ் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

;