சென்னை, மே 26-தேனி மக்களவைத் தொகுதியில் நடந்த முறைகேடு குறித்து வழக்கு தொடருவோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-திமுக கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.நாடு முழுவதும் அதிகார பலம், பண பலத்தால் மோடிவெற்றி பெற்றுள்ளார். தேனிதொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அதிகாரபலம், பணபலத்தால் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். எனினும் தேனியில் 4 லட்சம் பேர்எனக்கு வாக்களித் துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான தேனியிலேயே எனக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்துள்ளனர். இதுகுறித்துநான் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேனி தொகுதியில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இன்னும் சில ஆதாரங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். எந்தெந்த ஆதாரங்களோடு வழக்கு தொடரலாம் என்று வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்துக்கொண்டிருக்கிறோம். வழக்கு தொடர இன்னும் 25 நாட்கள் அவகாசம் இருக்கிறது. ஒரு வாரத்துக்குள் வழக்கு தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுப்போம்.வாக்கு எண்ணிக்கையின் போது பல மின்னணு எந்திரங்களில் சீல் இல்லை. கேட்டால் அரக்கு 1 மாதத்தில் உருகலாம் என்கிறார்கள். சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். மதுரை வாக்குச்சாவடியில் இருந்த பெட்டி தேனி மக்களவைத் தொகுதியில் இருக்கிறது. இதுபோல் முறைகேடாக நடந்திருக்கின்றன. இதுதொடர்பாக வழக்கறிஞர்களோடு கலந்து ஆலோசித்து கண்டிப்பாக நான் வழக்கு தொடர்வேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.