tamilnadu

பதிவு பெறாத மருத்துவமனை, கிளினிக், நர்சிங் ஹோம்கள் மூடும் பணி துவக்கம்

சென்னை, மே 19-சுகாதாரத்துறையில் முறையாகப் பதிவு செய்யாத தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள், நர்சிங் ஹோம்கள் ஆகியவற்றை இழுத்து மூடும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவம் சார்ந்த நிறுவனங்களும், 2018 தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்திருப்பது கட்டாயம். மார்ச் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற நிலையில், தற்போது அந்தக் கெடு இம்மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவச் சேவைகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தற்போது வரை 20 ஆயிரம் விண்ணங்கள் வந்து சேர்ந்துள்ளன.இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்தால் மட்டுமே, கிளினிக்குகள், மருத்துவ ஆய்வகங்கள், தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் ஆகியவை தொடர்ந்து இயங்க முடியும். இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ள, மருத்துவ நிறுவனங்களுக்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன.அதன்படி, போதிய இட வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிப்பிடம், ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான ஊழியர்கள் இருத் தல் வேண்டும். கிராமப்புறங்களில் இருக் கும் ஆய்வகங்கள் 500 சதுர அடி பரப்பிலும், நகர்ப் புறங்களில் இருக்கும் ஆய்வகங்கள் 700 முதல் ஆயிரத்து 500 சதுர அடி பரப்பிலும் இருப்பது அவசியம். சென்னையில், மருத்துவ சேவைகள் இயக்குநரகத்தின் 3 குழுக்கள், இதுதொடர்பான சோதனையில் ஈடுபட்டுள்ளன.பதிவு செய்யாத மருத்துவமனைகள், கிளினிக்குகள், நர்சிங் ஹோம்கள் ஆகியவை இழுத்து மூடப்பட உள்ளன. பதிவு செய்யும் பட்சத்தில், 5 ஆண்டுகளுக்கு உரிமம் கிடைக்கும்.