தலைநகர் தில்லி மற்றும் ஹர்யானா மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று, போலி வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை இணைய தளத்தில் ஏற்படுத்தி, நாடு முழுதும் இருக்கின்ற வேலையற்ற இளைஞர்கள் 27 ஆயிரம் பேர்களிடம் சுமார் 1 கோடியே 9 லட்சம் ரூபாய் சுருட்டியுள்ளனர்.
இவ்வாறு வேலையில்லாத இளைஞர்களை ஏமாற்றிய கும்பலிடமிருந்து தில்லிக் காவல்துறையினர் இதுவரை 49 லட்சம் ரூபாய் மீட்டிருக்கின்றனர். மேலும் அக்கும்பலிடமிருந்து ஏழு மொபைல் போன்கள், மூன்று மடிக்கணினிகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.
இந்த மோசடிக் கும்பலின் தலைவர்கைள் விஷ்ணு ஷர்மா மற்றும் ராம்தாரி என்பவர்கள் ஹரியானா மாநிலம் ஹிஸ்ஸார் நகரில் இருந்து செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
இவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின்கீழ் காவல்துறையினர் மேலும் மூவரை ஹர்யானா மற்றும் தில்லியில் கைது செய்திருக்கிறார்கள்.
இது தொடர்பாகக் காவல்துறையினர், இந்த மோசடிக் கும்பல், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் கீழ் ஸ்வஸ்தா ஏவிஎம் ஜன் கல்யாண் சன்ஸ்தான் (SAJKS-Swastha Avm Jan Kalyan Sansthan) என்ற பெயரில் www.sajks.org என்ற இணைய தளத்தைப் போலியாக உருவாக்கி, அதன்மூலம் பணத்தைத் திரட்டியிருக்கின்றனர். இதனைப் பார்ப்போர் இது போலியான ஒன்று என்று எளிதாகக் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.