tamilnadu

img

வறுமையில் வாடுவது 5 கோடி மக்கள் தானா? குழாய் மூலம் தண்ணீரே வரவில்லை, எரிவாயு எப்படி வரும்? 4 கோடி இலவச வீடுகளை ஆகாயத்தில் கட்டினார்களா?

பாஜக தேர்தல் அறிக்கையை “மோடியின் கேரண்டி” என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி வெளி யிட்டார். இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அதை கடுமையாக விமர்சித் துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர் கள் சந்திப்பில் ப.சிதம்பரம் கூறியதாவது :

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நான்கு மாதங்களாக தயாரித்து ஏப். 5 ஆம் தேதி தில்லியில் வெளியிட்டோம். அதை, இந்த தேர்தல் அறிக்கைதான் மக்களவைத் தேர்தலின் கதாநாயகன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று சொன்னார். அவருக்கும், திமுகவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டும் என்பதை மறந்துவிட்டது என தில்லியில் சொல்கிறார்கள். மார்ச் 30 ஆம் தேதி தான் அந்த அறிக்கையை தயாரிப்பதற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் குழுவை அமைத்தார்கள்.

கின்னஸ் சாதனையில் இடம் கொடுக்கலாம் !
அந்த குழு, 14 நாட்களிலேயே தயாரித்து, ஏப்.14 அன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த 14 நாட்களில் 15 லட்சம் பரிந்துரைகளை பரிசீலித்ததாக சொல்கிறார்கள். எப்படி 14 நாட்களில் 15 லட்சம் பரிந்துரைகளை செய்தார்கள் என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும். அதற்காக, அந்த குழுவுக்கு கின்னஸ் புத்தகத்தில் இடம் கொடுக்க வேண்டும்.  இந்த தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்புகளை நான் பார்த்தேன்.  அரசின் நடப்பு திட்டங்கள், புதிய திட்டங்களாக சொல்லியிருக்கிறார்களே தவிர வேறு எதுவும் இல்லை.

உண்மை கணக்கு என்ன?
இதற்கு சில உதாரணங்களை சொல்கிறேன்:

இந்தியாவில் ஏழ்மை, ஏறத்தாழ அகன்றுவிட்டது என்று நிதி ஆயோக் குறிப்பிடுகிறது. 5 விழுக்காடு மக்கள்தான் வறுமைக் கோட்டிற்கு  கீழ் இருக்கிறார்கள் என்று நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சொல்கிறார்.

5 கோடி மக்கள் தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள் என்றால், 80 கோடி மக்கள் - ஏறத்தாழ 16 முதல் 20 கோடி குடும்பங்களுக்கு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இலவச ரேசன் 5 கிலோ அரிசி அல்லது 5 கிலோ கோதுமை தருவதாக மோடி சொல்வது ஏன் ?. 

அந்த மக்களுக்கு தருவதை நான் வரவேற்கிறேன். ஆனால்,அது எதைக் காட்டுகிறது. இன்னும் ஏழ்மை இருக்கிறது. அத்தனை குடும்பங்களும் ஏழைகள் அல்ல. அதே நேரத்தில், 5 விழுக்காடுதான் ஏழைகள் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை நாங்கள் வன்மையாக நிராகரிக்கிறோம்.

ஏழ்மை இருக்கிறது. கணிசமான எண்ணிக்கையில் ஏழ்மை இருக்கிறது. அதற்கு சாதிவாரி பொருளாதார கணக்கெடுப்பு நடத்தினால்தான்  உண்மை எண்ணிக்கை கண்டுபிடிக்க முடியும்.

உறங்கும் உஜ்வாலா சிலிண்டர்கள்
அடுத்து,  எல்லா வீடுகளுக்கும் சமையலுக்கான எரிவாயுவை குழாய் மூலம் அனுப்புவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதைவிட ஒரு வேடிக்கை இருக்க முடியுமா? அதாவது, அதை அறிவித்தவர்கள் இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் சாலை மார்க்கத்தில் சென்றதே கிடையாது என்று நினைக்கிறேன். எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே வரவில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது, குழாய் மூலம் எரிவாயு வருமா? உஜ்வாலா திட்டம் போட்டு இலவச அடுப்பு தந்தேன் என்று சொல்கிறார்கள்.

அதை வாங்கி வைத்திருக்கிறார்கள். நான் இல்லை என்று கூறவில்லை. 30 நாட்கள் கழித்து ஒரு சிலிண்டர் தேவை அல்லது 40 நாட்கள் கழித்து ஒரு சிலிண்டர் தேவை என்றால், ஆண்டுக்கு 9 முதல் 12 சிலிண்டர் வரை ஒரு குடும்பம் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால், இன்றைக்கு சராசரியாக அகில இந்திய அளவில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்கள் உபயோகிப்பது 3.7 சிலிண்டர் தான். இது அரசின் கணக்கு. பல மாநிலங்களில் சிலிண்டர் பயன்படுத்துவது கிடையாது.

காரணம்,  ஒரு சிலிண்டரின் விலை 1,050 முதல் 1200 ரூபாய்க்கு உயர்ந்துவிட்டது. பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் பயன்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். ஒரு சிலிண்டர் வாங்கினால் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் வரை பயன்படுத்துகிறார்கள். இந்த சூழ்நிலையில்,குழாய் மூலம் எல்லா வீடுகளுக்கும் நாங்கள் சமையல் எரிவாயு அனுப்புகிறேன் என்று சொல்வது என்பது மிகப்பெரிய வேடிக்கை. அவர்களது இந்தி மொழியில் சொல்ல வேண்டும் என்றால் ‘சுல்லா’, அதாவது வேடிக்கையாகும்.

எங்கே 4 கோடி வீடு? 
தற்போது வரை 4 கோடி இலவச வீடுகள் கட்டி முடித்துவிட்டார்களாம், இன்னும் 3 கோடி வீடுகள் கட்டப் போகிறோம் என்று அறிவிக்கிறார்கள். அவர்கள் கூறும் 4 கோடி வீடுகள் இந்தியாவில் தானே கட்டியிருக்க முடியும்.

ஆகாயத்தில் கட்ட முடியாது அல்லவா? இந்தியாவில் 776 மாவட்டங்கள் இருக்கின்றன. சராசரியாக பார்த்தால் ஒரு மாவட்டத்தில் 52 ஆயிரம் வீடுகளை கட்டியிருக்க வேண்டும். அதில் சிவகங்கையும் ஒன்று. எங்கே வீடு கட்டியிருக்கிறார்கள் என்று காட்ட வேண்டும்? புதுக்கோட்டையில் எங்கே கட்டியிருக்கிறார்கள் என காட்டச் சொல்லுங்கள்.  

இதெல்லாம், கணக்கில் வீடுகள் கட்டியதாக எழுதிவிடுவார்கள். ஆனால், வீடு கட்டி இருக்க வேண்டுமல்லவா?

இந்தியாவை சூழ்ந்த இரண்டு ஆபத்துக்கள்
இந்தியாவில் இரண்டு பெரிய ஆபத்துக்கள் காத்திருக்கின்றன என்று நான் பேசி வருகிறேன்.  ஜனநாயகத்திற்கு, சகிப்புத்தன்மைக்கு, சக வாழ்வுக்கு, மதச்சார்பின்மைக்கு மிகப் பெரிய பேராபத்து வந்துள்ளது.

அதில் முதலாவது, ‘ஒரு நாடு, ஒரே தேர்தல்’. மற்றொன்று பொது சிவில் சட்டம். இவை இரண்டும் மக்களைப் பிளந்துவிடும், இந்திய நாட்டை சர்வாதிகார பாதையில் அழைத்துச் சென்றுவிடும். ஒரு கட்சிதான் நிலைத்து இருக்கும்.

மற்ற கட்சிகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும் என்று நான் எச்சரித்தேன். மீண்டும் அவர்கள் தங்களது தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் ‘ஒரு நாடு ஒரே தேர்தலை’ அமல் செய்வோம், பொது சிவில் சட்டத்தை கொண்டு  வருவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகவே, மக்கள் மிகுந்த எச்சரிக்கை யாக வாக்களிக்க வேண்டும்.  இந்த இரண்டுதான், அவர்களுக்கு சர்வதிகாரப் பாதையில் இந்தியாவை அழைத்து செல்வதற்கு வழிசெய்கிறது. ஆகவே, மிகுந்த எச்சரிக்கை யுடன் பாஜகவின் தேர்தல் அறிக்கையையும் அந்த கட்சியையும் நிராகரிக்க வேண்டும்.