சென்னை,ஜூன் 23- தமிழகம் முழுவதும் கணினி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான டி.ஆர்.பி தேர்வு நடைபெற்றது. சர்வர் கோளாறு, தேர்வு மையம் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட குளறு படிகளால், சில இடங்களில் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை தேர்வு செய்வ தற்கான டி.ஆர்.பி தகுதித் தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிறன்று (ஜூன்23) ஆன்லைன் முறையில் நடைபெற்றது. இந்நிலையில் மதுரை அருகே கே.எல்.என்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி யில், தேர்வு எழுத வந்தவர்களில் பலருக்கு இடம் ஒதுக்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் இடம் ஒதுக்கப்பட்டு தேர்வு எழுத சென்றவர்களும், சர்வர் இயங்காததால், தேர்வை புறக்கணித்து விட்டு வெளியே வந்தனர். இதையடுத்து கல்லூரியை முற்றுகையிட்ட தேர்வர்கள், ஆன்லைன் தேர்வை ரத்து செய்யக் கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, மதியம் 1 மணி முதல், 4 மணி வரை தேர்வு நடைபெறும் எனக் கூறியதையடுத்து, முற்றுகை யைக் கைவிட்டு தேர்வு எழுதச் சென்றனர். இதேபோல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் சர்வர் இயங்காததால் ஆன்லைன் தேர்வு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. காலை 10 மணிக்கு துவங்க வேண்டிய தேர்வு, தாமதமானதால் ஆத்திரமடைந்த தேர்வர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்வு நேரம் மாற்றி அமைக்கப்பட்டு 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்ப ட்டதை அடுத்து, மறியல் கைவிட ப்பட்டது. நாகை மாவட்டம் இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி யில், சிலருக்கு மட்டுமே தேர்வெழுத இடம் ஒதுக்கப்பட்டி ருந்த நிலையில், மற்றவர்கள் தேர்வெழுத முடியாமல் தவித்தனர். இதனால் தேர்வர்கள் அங்கிருந்த போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 1 மணி முதல் 4 மணி வரை தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே தேர்வர்களுடன் வந்தவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்யாததால், வெயிலில் சாலையோரங்களிலும், ஏடிஎம் மையங்களிலும் காத்திருந்தனர்.
மறுதேர்வு...
டி.ஆர்.பி தேர்வில் தொழில்நுட்பக் கோளாறால், தேர்வெழுத முடியாதவர்களுக்கு மற்றொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதுகலை கணினி ஆசிரியர் நிலை -1க்கு, கணினி வழியில் 119 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக கணினி வழியில் நடத்தப்பட்ட இத்தேர்வு, பெரும்பாலான மையங்களில் எவ்வித இடர்பாடுமின்றி நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு சில மையங்களில் ஓரிரு ஆய்வகங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணங்களால், சில தேர்வர்கள் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தேர்வு மையத்துக்கு வருகை புரிந்து கணினி தொழில்நுட்பக் கோளாறால் தேர்வில் பங்கேற்காதவர்கள், தேர்வினை நிறைவு செய்யாதவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இத்தேர்வர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், தேர்வு நடைபெறும் நாள், மையங்கள் சார்ந்த விவரங்கள் தேர்வர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. மேலும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தேர்வு மைய விவரங்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலும் வெளியிடப்படும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.