tamilnadu

ரூ. 7,304 கோடி நட்டம்: போக்குவரத்துத் துறை அறிவிப்பு

 சென்னை,ஜூலை 9- தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை ரூ. 7 ஆயிரத்து 304 கோடி நட்டத்தில் இயங்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில், விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், நெல்லை, கோவை ஆகிய 6 மண்டலங்கள் உள்ளன. இவை தவிர சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஆகிய இரண்டும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 22 ஆயிரத்து 203 பேருந்துகள் உள்ளன. போக்குவரத்து துறை கடும் நெருக்கடியை சந்திக்கவே 6 ஆண்டுகளுக்கு முன்னர் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. இருப்பினும் அரசு போக்கு வரத்துக் கழகமானது 7 ஆயிரத்து 304 கோடி ரூபாய் நட்டத்தில் இயங்கி வருவதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2017 - 18ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 2 ஆயிரத்து 109 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் வாங்கிய கடன் தொகை ரூ. 2 ஆயிரத்து 400 கோடி அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.