சென்னை - யாழ்ப்பாணம் விமான சேவை தொடங்கியது
சென்னை,நவ.11- சென்னை- யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை திங்களன்று(நவ.11) தொடங்கியது. பகல் 12.20 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயணி களுடன் சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றது. சென்னையிலிருந்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நகருக்கு நேரடி விமான சேவை வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் சேவையை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் சோதனை ஓட்டம் கடந்த மாதம் 17 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, சென்னை- யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை தொடங்கியது. பகல் 12.20 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயணி களுடன் சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றது. முதல் நாளான திங்களன்று(நவ.11) சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் புறப்பட்ட சிறிய ரக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 15 பயணிகள் இருந்தனர். விமானி ரத்தன்சிங் இதை ஓட்டிச் சென்றார். வரும் நாட்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்
பொன்னேரி, நவ.11- மீஞ்சூர் அருகே உள்ள சோமஞ்சேரி கிராம மக்களுக்கு ஆலோடு பகுதியில் இருந்து குழய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக சோமஞ்சேரி கிராம மக்களுக்கு சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை. மேலும் வினியோகிப்படும் நீரும் உவர்ப்பு தன்மையுடன் இருந்தது. இதனால் கிராம மக்கள் சிரமம் அடைந்தனர். இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திங்களன்று (நவ.11) பொன்னேரி- தத்தை மஞ்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த அரசுப் பேருந்தை சிறை பிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் காட்டூர் காவல்துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.