tamilnadu

சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்க பள்ளிகளுக்கு உத்தரவு

சென்னை, மே29-கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3 ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், சுகாதாரம், அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்குமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கோடை விடுமுறைக்குப் பின்னர் தமிழகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்காக பள்ளிக் கல்வித்துறை பல்வேறு அறிவுரைகள் வழங்கியிருக்கிறது.பள்ளிகளில் சுகாதாரம், அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. தண்ணீர் தொட்டிகள், கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர், மின் இணைப்புகள், இணைய வசதி, மேசை மற்றும் நாற்காலிகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றை சீரமைத்து செப்பனிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னை மாவட்டத்தைப் பொருத்தவரை, பள்ளிகளில் மாணவர்களின் பயன்பாட்டுக்குத் தேவையான தண்ணீரை முழுமையான அளவில் விநியோகம் செய்ய பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.ஒரு மாணவருக்கு சராசரியாக கழிவறை பயன்பாட்டுக்கு 10 லிட்டரும், குடிநீர் பயன் பாட்டுக்கு 1 லிட்டரும் தண்ணீர் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில், மாணவர்களின் அன்றாட பயன்பாட்டுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுப் பது பள்ளிகளுக்கு சவாலான ஒன்றாக உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. பல பள்ளிகளில் போர்வெல் வசதிகள் உள்ளன. ஆனால் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து விட்டதால், போர்வெல் மூலம் தண்ணீர் தொடர்ந்து கிடைக் குமா? என்று அந்தப் பள்ளிகள் ஐயம் எழுப்புகின்றன.சில பள்ளி நிர்வாகங்கள், அருகாமையில் உள்ள விளைநிலங்களில் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்து மாணவர்களின் பயன்பாட்டுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளன. மெட்ரோ மற்றும் தனியார் டேங்கர் லாரிகளை நாடினாலும் தண்ணீர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பள்ளிகள் தெரிவித்துள்ளன.இதுமட்டும் அல்லாமல், சுகாதாரமற்ற தண்ணீரால் மாணவர்களுக்கு காலரா, வயிற்றுப் போக்கு, சிறுநீரகத் தொற்று போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் பள்ளிகள் அச்சம் தெரிவித்துள்ளன. எனவே கோடை காலம் முடிந்தவுடன் பள்ளிகளைத் திறக்கலாம் என்றும் அல்லது படிமுறை அடிப்படையில் பள்ளிகளை நடத்தலாம் என்றும் பள்ளி நிர்வாகங்கள் கருதுகின்றன.

;