tamilnadu

img

ஏழை. எளிய மக்களுக்கு பயன்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்வதா  பி.ஆர்.நடராஜன்  எம்.பி  எதிர்ப்பு

கோவை, ஏப்.7-
ஏழை. எளிய மக்களுக்கு பயன்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்யும் மத்திய பாஜக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின்  கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மத்திய அமைச்சரவையின் முடிவாக மத்திய அரசு அறிவித்திருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகள் ரத்து செய்யப்படும் என்பது ஏற்பதற்கில்லை. நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஏழை, எளிய மக்கள் வாழுகின்ற பகுதியான அரசின் உதவிகள் இதுவரை பெறாத கிராமப்புற பகுதிகளுக்கு  இந்த நிதி பலவகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆண்டு ஒன்றிற்கு சுமார் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மக்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகள் என்கிற போது மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய மிகப்பெரும் நிதியை தன்னை நோக்கி திருப்பிக்கொள்வதாக கருத வேண்டியுள்ளது. 

மேலும், கொரோனாவிற்கான நிதி ஒதுக்கீட்டை பார்க்கின்றபோது இதிலேயே அரசியல் வேறுபாடுகள் உள்ளது இப்போதே தெளிவாக தெரியும்.  இந்த நிலையில் இந்த தொகுதி நிதி என்பது மத்திய அரசின் தொகுப்பில் இணைக்கப்பட்டு செலவு செய்யப்படுமேயானால் எந்த மாநிலத்திற்கு இதனை செலவு செய்கிறார்கள் என்ற விபரங்கள் நமக்கு தெரியாது. வாக்களித்த மக்களுக்கு குறைந்தபட்ச நன்மைகளை செய்வதற்கான இந்த நிதியையும் பறிப்பது என்பது சரியான நடவடிக்கையில்லை. 

இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி 25 ஆயிரம் கோடி ரூபாயை புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கும், ராஜபாதையை உருவாக்குவதற்கும் மோடி அரசாங்கம் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த அவசர நிலையை கருத்தில் கொண்டு அந்த நிதியை கொரோனா தடுப்பு நிதியாக பயன்படுத்தலாம். புதிய கட்டிடத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தீர்மானிக்காமல் தான் அறிவித்த தன்னை முன்னிலைப்படுத்துகிற நிகழ்ச்சிகளை பாரதிய ஜனதா கட்சி மக்கள் மீது குறைந்த பட்சம் ஈவு இரக்கம் கூட காட்டாமல் நடந்துகொள்வது என்பது ஏற்புடையதன்று. இதனை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த நிதி என்பது ஏழைஎளிய மக்களுக்கும், தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுகிற மக்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆகவே மத்திய அரசு தொகுதி மேம்பாட்டு நிதியினை ரத்து செய்யும் நடவடிக்கையை திரும்ப பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் பி.ஆர்.நடராஜன் கூறியுள்ளார்.