tamilnadu

img

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களிடம் பேரவைத் தலைவர் இன்று விசாரணை

சென்னை:
எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களுக்கு உச்சநீதிமன்ற அறிவுரைப்படி தமிழக சட்டப்பேரவை தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், வியாழக்கிழமை (ஆக.27) முதல் காணொலி காட்சியின்மூலம் அவர்களிடம் விளக்கம் கேட்டு பேரவைத் தலைவர் விசாரணை நடத்துகிறார்.தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பின்போது, தற்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் பேரவை தலைவர் சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.இந்த நிலையில், திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘‘உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் பேரவைத் தலைவர் இது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உச்சநீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று ஓ.பன்னீர் செல்வம், கே.பாண்டியராஜன் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’’ என்று கோரப்பட்டு உள்ளது. மணிப்பூர் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கும் இந்த மனுவில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்தே, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதனன்று (ஆக.26) காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் பேரவைத் தலைவர் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பிய  நீதிபதிகள், இந்த விஷயத்தில் பேரவைத் தலைவர் உடனடியாக செயல்பட வேண்டும் என்றும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.மேலும், செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் பதிலளிக்க பேரவைத் தலைவர் அவகாசம் கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து மேலும் 4 வாரத்திற்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.இதனையடுத்து, 11 எம்எல்ஏக்களிடமும் வியாழக்கிழமை முதல் பேரவைத் தலைவர் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

;