tamilnadu

img

தமிழ் தெரியாதவர்களும் கீழமை நீதிபதியாகலாம் என்ற அறிவிப்பை திரும்ப பெற சிபிஎம் வலியுறுத்தல்

தமிழில் எழுதப்படிக்கத் தெரியாதவர்களும் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் ஆகலாம் என்ற  தேர்வாணய உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

கீழமை நீதிமன்ற  நீதிபதிகள் நியமனத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை மாற்றி தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தமிழ் எழுத படிக்கத் தெரியாதவர்களும் கீழமை நீதிமன்ற  நீதிபதிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், நீதிபதிகளாக தேர்வு பெற்றபின்பு பயிற்சிக்காலத்தில் தமிழ் கற்றுக்கொண்டு தமிழ்மொழி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் தமிழக வழக்கறிஞர்கள் புறக்கணிப்பட்டு, தமிழ் தெரியாத இதர மாநிலத்தவர்களும் பணியில் அமரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்மொழி தெரியாதவர்களை கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பது பல்வேறு உயர்நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணனாது ஆகும். தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்கள் கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பது நீதிபரிபாலனத்தில் பல்வேறு சிரமங்களை மக்களுக்கு ஏற்படுத்தும். கீழமை நீதிமன்ற கட்டமைப்பை சிதைக்கும் விதமாகவும், நீதிபரிபாலன முறையில் மக்களை அந்நியப்படுத்தும் விதமாகவும் இருக்கும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நீதிமன்ற நடவடிக்கைகளில் அனைத்து மட்டங்களிலும் தமிழ்மொழியை முழுமையாக வழக்காடு மொழியாக பயன்படுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு ஜனநாயக சக்திகள் குரலெழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு தமிழை புறக்கணிக்கிற நடவடிக்கையாக அமைந்துள்ளது.

எனவே இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் உடனடியாக திரும்பப் பெறவேண்டுமென்றும்; ஏற்கனவே நடைமுறையில் உள்ள தமிழை உள்ளடக்கிய தேர்வை நடத்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

 

;