tamilnadu

img

விஷப் பூச்சிகளின் கூடாரமான திருமுல்லைவாயல் பூங்கா

அம்பத்தூர், நவ. 28- ஆவடி மாநகராட்சி 8ஆவது வார்டில், திருமுல்லைவாயல் காலனி, வடக்கு முல்லை நகர், கிழக்கு தென்றல் நகர், சரஸ்வதி நகர், லட்சுமி நகர், அய்யப்பன் நகர், பச்சையம்மன் நகர், பத்மாவதி நகர், மூர்த்தி நகர், தென்றல் நகர், அனுமன் நகர், ஆர்த்தி நகர், விநாயகா நகர், முருகப்பா காலனி, அம்பேத்கார் நகர், வடக்கு தென்றல் நகர், ஆர்.சி.குடியிருப்பு உள்ளிட்ட நகர்கள் உள்ளன. மேற்கண்ட பகுதி மக்களுக்கு நடைபயிற்சி செய்யவும், சிறுவர்கள் விளையாடவும் பல ஆண்டு காலமாக பூங்கா வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் அப்போதைய நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, திரு முல்லைவாயில் கிழக்கு தென்றல் நகர் பகுதியில் பூங்கா அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதையொட்டி 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 2014ஆம் ஆண்டு, நடை பயிற்சி மேற்கொள்ள நடைபாதை, சிறுவர்கள் விளையாட ஊஞ்சல்கள், சறுக்குப் பாதை, ராட்டினம், இருக்கைகள், பூச்செடிகள், மின் விளக்குகள், சி.சி.டி.வி. கேமரா உள்ளிட்டவைகளுடன் பூங்கா அழகிய கலைநயத்துடன் அமைக்க ப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் அனைவரும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பூங்காவை நகராட்சி நிர்வாகம் சரிவர பராமரிக்காமல் விட்டுவிட்டது. 

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், கிழக்கு தென்றல் நகர் பூங்காவில் சமூக விரோதிகள் நள்ளிரவில் புகுந்து மின் விளக்குகள், இரும்பினால் ஆன விளையாட்டுப் பொருட்களை திருடிச் சென்று விட்டனர். மேலும் பூங்கா பாராமரிக்காமல் விட்டதால் ஊஞ்சல்கள், ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் உடைந்து கிடக்கிறது. இதனால் சிறுவர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பூங்காவில் உள்ள பூச் செடிகள் வளர்ந்து பராமரிப்பு இன்றி உள்ளது. இங்குள்ள நீர் ஊற்றில் மோட்டார் பொருத்தாததால் பயனின்றி கிடக்கிறது. இதனால் நீர் ஊற்றை கண்டு களிக்க முடிய வில்லை.  மேலும் பூங்கா முழுவதும் முட்செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கின்றன. இதில் பாம்பு, தேள், விஷ வண்டுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சிறுவர்கள், பெண்கள் வந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்காவில் மின் விளக்குகள் எரியாததால் அதிகாலை, இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி பூங்காவில் நடை பயிற்சிக்கு வரும் முதியோர்கள், பெண்களிடம் வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் பூங்காவில் இரவு, பகல் பாராது கஞ்சா புகைப்பது, மது அருந்துவது போன்ற சமூக விரோதச் செயல்களும் நடைபெறுகின்றன. இதுகுறித்து காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பூங்காவை சுற்றியுள்ள பகுதியில் காவல் துறையினர் காலை, இரவு என ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றனர்.