tamilnadu

மக்கள் பயன்பாட்டிற்கு வந்த யானைக்கவுனி மேம்பாலம்

சென்னை, மார்ச் 15- சென்னை யானைக்கவுனி மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெள்ளி யன்று (மார்ச் 15) திறக்கப்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களுக்கு இடையே இருப்புப்பாதைகளுக்கு மேல் யானைக் கவுனி மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் 1933ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தப் பாலம் வால்டாக்ஸ் சாலை யையும், ராஜா முத்தையா சாலையையும் இணைக்கும் முக்கியமான போக்குவரத்து பாலமாகும்.

இந்த பாலம் மிகவும் பழமை யானதாகவும், பழுதடைந்த நிலையிலும் இருந்ததால் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து கனரக மற்றும் இலகுரக வாக னங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு பாலம் மூடப்பட்டது.

71.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 520 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலத்தில் புதிய பாலம் அமைக்கும் பணிகள் 2020இல் துவக்கப்பட்டன. தற்போது வால்டாக்ஸ் சாலையில் இருந்து,ராஜா முத்தையா சாலையை சென்றடையும் ஒருவழிப்பாதை பணிகள் நிறைவடைந்தன.

இதையடுத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் வெள்ளியன்று (மார்ச் 15) திறந்து வைத்தனர். இதில் மேயர் ஆர்.பிரியா, இணை ஆணையர் ஜி.எஸ்.சமீரன், வட்டார துணை ஆணையர்கள் கட்டா ரவி தேஜா (வடக்கு), கே.ஜெ.பிரவீன் குமார் (மத்தியம்), மண்டலக் குழு தலைவர் பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் ராஜேஷ் ஜெயின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.