tamilnadu

சாகித்யான்கள் தொடர்ந்து சண்டைபோடத்தான் வேண்டும்-

-தேனி சுந்தர்

வழக்கமாக கல்வி ஆண்டின் இறுதியில் தான் பள்ளியில் ஆண்டுவிழா நடக்கும். கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் திட்டமிடும் அந்த கடைசி நாட்களில் ஏதாவது ஒரு காரணத்தினால் திடீர் இடைஞ்சல்கள் வந்து விடும். கொரானா பரவல், கோடை வெயில் அதிகரிப்பு இப்படியான காரணங்கள் இருக்கும். இந்த முறை வீரபாண்டி மாரியம்மன் கோயில் திருவிழா காரணமாக மாவட்டம் முழுதும் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டது. இடையில் ஒரு நாள் தான் இருக்கு. மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியாத நிலை. எனவே ஒருநாள் முன்னதாகவே நடத்தி முடிப்பது என தீர்மானித்தோம். ஒரே நாளில் காலையில் குழந்தைகளுக்கான விளையாட்டு விழா, மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்தோம். இல்லையெனில் ஆடல், பாடல் என பயிற்சிகள் எடுத்த குழந்தைகள் வருத்தப் படவேண்டி இருக்குமே.  பால்வாடி குட்டிகள் உட்பட அனைத்து குழந்தை களுக்கும் வெவ்வேறு போட்டிகள் வைக்கப் பட்டன. தவளை ஓட்டம், பாட்டிலில் நீர் நிரப்புதல், கல் பொறுக்குதல், நொண்டி ஓட்டம், இசை நாற்காலி  என ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்ற வகையில் போட்டி களை வைத்து முதல் மூன்று இடங்கள் பெற்ற குழந்தைகளின் பட்டியலை தயார் செய்ய வேண்டும்.  

மாலை நடக்கும் ஆண்டு விழாவில் அவர்களுக்கு பரிசுகளை வழங்கி விடலாம்.! இறுதிப் பட்டியலை எழுதிக் கொண்டிருக்கும் போதே சக ஆசிரியர் காதருகே வந்து கிசுகிசுத்தார். “சாகித்யன் அம்மா சண்டைக்கு வர்றாங்க” என்றார்.  என்னவாம் என்று கேட்டேன். “என் மகனுக்கு காது கேட்காது. அவனுக்கு எப்படி நீங்க இசை நாற்காலி போட்டி வைக்கலாம்?” என்கிறார்.  ஆமாம், சரியா தான் கேட்டிருக்காங்க. பின்ன எப்படி சமாளிச்சிங்க.? என்றேன். “இல்லல்ல. அதெல்லாம் அவனுக்கு கேட்டிருக்கும்னு சொன்னேன். அவனையும் கூப்பிட்டு கேட்டோம். கேட்டுச்சுன்னு சொல்லிட்டான்.!” என்றார். இசை நாற்காலி போட்டியின் போது மைக் செட் ஆபரேட்டர் நான் தான். விஜய் நடித்த பிகில் படத்தில் இருந்து  “சிங்கப் பெண்ணே.” பாடலை நிறுத்தி நிறுத்தி ஒலிபரப்பு செய்து கொண்டிருந்தேன். சாகித்யன் காதில் கருவியும் மாட்டி இருக்கவில்லை. ஆக, நிச்சயம் அவனுக்கு பாட்டுச் சத்தம் கேட்டிருக்க வாய்ப்பில்லை தான். ஆனாலும், தன் அம்மா தன் ஆசிரியருடன் சண்டை போடுவதை விரும்பாமல்  “சத்தம் கேட்டதாகச்” சொல்லி சண்டையை அப்போதைக்கு நிறுத்தி இருக்கிறான். பிகில் படத்தில் ஒரு முக்கியமான வசனம் இருக்கும். “கப்பு முக்கியம் பிகிலு.!” அது போல எங்களுக்கும் ஒரு வசனம் சொல்லலாம். விளையாட்டுப் போட்டிகளை விட “பரிசு வழங்க லிஸ்ட்டு முக்கியம் பிகிலு.!”  சாகித்யன் மாற்றுத் திறனாளிகளுக்கு நடந்த ஒன்றிய அளவிலான ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவது இடமும் மாவட்ட அளவில் ஐந்தாவது இடமும் பெற்றவன். இத்தனைக்கும் அவன் ஓடியது சக வயது குழந்தைகளுடன் அல்ல. அவனை விட மூத்த சிறுவர்களும் பந்தயத்தில் இருந்தார்கள்.

அவனைத் தான் இசை நாற்காலி போட்டியில் வைத்து நாங்கள் தோற்கடித்தோம். நாம் நினைப்பது போல இந்தப் பிரச்சினை ஆண்டு விழா தொடர்பானது மட்டும் இல்லை.! பள்ளிகளில் நாம் நடத்தும் போட்டிகள் மட்டும் “பொதுவாக” இல்லை. மேடைகளில் நம் பேச்சுகள் “பொதுவாக” தான் இருக்கின்றன. நம் வகுப்பறைகளில் பாடங்கள் “பொதுவாக” இருக்கின்றன. நாம் வைக்கும் நீச்சல் போட்டியில் ஒட்டகங்கள் தோற்கின்றன. பாவம் அவைகளுக்கு நீந்தத் தெரியாது. நின்ற இடத்திலேயே குதிக்கும் போட்டி வைக்கிறோம். இந்த முரட்டு யானைகளுக்கு அது கூடத் தெரிவதில்லை. தோற்றுப் போகின்றன. ஆந்தைகளுக்கும் வௌவால்களுக்கும் மிக மிக சாதாரணமான, எளிய போட்டிகளைத் தான் நடத்துகிறோம். அதுவும் பகலில். அதில் ஆந்தையும் வௌவாலும் போட்டிக்கு வருவதே இல்லை. நாம் என்ன செய்ய முடியும். நமக்கும் வருத்தம் தான். இருந்தாலுமப் ஆப்சன்ட் போட்டு அவைகளைத் தோற்கடிக்கிறோம்.! பிரச்சினை ஆண்டு விழா தொடர்பானது மட்டும் இல்லை. எனவே சாகித்யன்கள் தொடர்ந்து சண்டை போடத் தான் வேண்டும்.!