tamilnadu

கே.பி.பார்க் குடிசைமாற்று வாரிய குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டு ஆணையை ரத்து செய்யக்கூடாது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில் இடைக்கால உத்தரவு

சென்னை, மே 21 - எழும்பூர் கேசவப்பிள்ளை பூங்கா (கே.பி.பார்க்) குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, குடியிருப்புதாரருக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாநகராட்சி, எழும்பூர் தொகுதி, 77வது வட்டத்திலுள்ள கே.பி பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. 1970ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த குடியிருப்புகளை புதுப்பித்து கட்டித்தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தியது. இதனையடுத்து அங்கு குடியிருந்தோருக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு, குடியிருப்பு இடிக்கப்பட்டது. ஆனால் அந்த மக்கள் தங்குவதற்கு மாற்று இடம் வழங்கப்படவில்லை. இதனால் அருகிலிருந்த ராஜேந்திரன் மைதானத்தில் (எல்பேன்ட்கிரவுண்ட்) மக்கள் கூடாரம் அமைத்து தங்கினர். இதனையடுத்து 100 சதுரஅடி பரப்பளவு கொண்ட தகரத்தாலான தற்காலிக குடியிருப்பு உருவாக்கப்பட்டது. இருப்பினும் அங்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், 2019ம் ஆண்டு கே.பி.பார்க் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், பயனாளிகளிடம் ஒப்படைக்கவில்லை. மாறாக, தற்காலிக கொரோனா வார்டாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கே.பி.பார்க்கில் புதுப்பித்துக் கட்டப்பட்ட குடியிருப்புகளை குடியிருப்பு பயன்பாட்டை தவிர வேறுவகையில் எதற்கும் பயன்படுத்தக் கூடாது, ஏற்கெனவே அங்கு குடியிருந்த மக்களுக்கு கொடுக்கப்பட்ட ஒதுக்கீட்டு ஆணைப்படி, பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க வேண்டும். கே.பி.பார்க் பகுதி மக்களின் வாழ்வாதார, சுற்றுப்புறச் சுகாதார வசதி மேம்பட வழிவகை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா அமர்வு முன் வியாழனன்று (மே 21) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், இரா.திருமூர்த்தி ஆகியோரும், அரசுதரப்பில் வழக்கறிஞரும் ஆஜாராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்தோருக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டு ஆணையை ரத்து செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். கே.பி.பார்க் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம், சுற்றுப்புறச் சுகாதார வசதி மேம்பாடுகள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தலைமைச் செயலாளர், தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய மேலாண் இயக்குநர், சுகாதாரத்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டு நீதிபதிகள், வழக்கை ஒத்தி வைத்தனர்.