tamilnadu

ஆளுநர் உரை ஏமாற்றமளிக்கிறது 1ம் பக்கத் தொடர்ச்சி

குரலை எழுப்பிட வேண்டும்.தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்தச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முறையான அனுமதி பெற்று இப்போராட்டங்களை நடத்த முயன்ற போதிலும் காவல்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்து, போராடுபவர்கள் மீது பொய் வழக்கு போட்டு அலைக்கழித்து வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. ஆளும் பாஜக உள்ளிட்ட ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள் போராடும்போது மட்டும் காவல்துறை அனுமதி வழங்குவது என்பது இந்த அரசின் பாரபட்சமான  போக்கினை வெளிப்படுத்துகிறது.

ஆளுநர் அறிக்கையில் ‘தமிழக மக்கள்எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தை யோ பின்பற்றினாலும் அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்கிறது’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் மதரீதியான பாரபட்சமான குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகிய விஷயங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து விட்டு, அனைவரின் நலன்களை பாதுகாக்கப்போவதாக கூறுவது மக்களை ஏமாற்றுவதாக உள்ளது. மத்திய அரசின் மேற்கண்ட சட்டங்களுக்கு மாநில அரசு தனது ஆதரவினைவாபஸ் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழக விவசாயிகள் நெடுங்காலமாக போராடிவரும் விளைபொருட்களுக்கு நியாயமான விலை, விவசாயக்கடன்  தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இந்தஆளுநர் அறிக்கையில் எவ்வித  அறிவிப்பும்இல்லாதது,  விவசாயிகளைப் பற்றிய தமிழகஅரசின் கவலையற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. 100 நாள் வேலைத்திட்டத்தில் பல மாதங்கள் கூலி பாக்கி வைத்துள்ளதுடன் முறையாக வேலை வழங்காத நிலைமை நீடிக்கிறது. இக்குறைபாடுகளைப் போக்குவதற்கு எவ்விதத் திட்டமும் இல்லை.தமிழகத்தில் கரும்பு விவசாயிகள், கரும்புஆலைகளிடம் இருந்து வர வேண்டிய பாக்கித்தொகை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்கள் துயர் துடைக்கும் வகையிலான திட்டங்கள் எதுவும் ஆளுநர் உரையில் இல்லாதது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

நலிந்த பிரிவினருக்கான ஓய்வூதிய தொகை மேலும் 5 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள போதிலும், ஏற்கெனவே ஓய்வூதியம் பெற்று வரும் பலரும் முறையாக ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியதொகை கிடைக்கவில்லை என்று கூக்குரல் எழுப்பி வருகின்றனர் என்பதனையும் மாநிலஅரசு கவனமுடன் பரிசீலித்து ஓய்வூதியம் மாதாமாதம் அனைவருக்கும் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மாநில அரசைக் கேட்டுக் கொள்கிறது.தமிழகத்தில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், சிறு,குறு தொழில்கள் பல்லாயிரக்கணக்கில் மூடப்பட்டுள்ள நிலை ஆகியவற்றில் மாநில அரசு உடனடி கவனம் செலுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

;