அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தால் நாடே ஸ்தம்பித்தது. மேலும் தமிழகத்திலும் பொதுமக்கள் பெருவாரியான ஆதரவை வருகின்றனர்
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது, மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் சட்ட விரோத தொகுப்புகளை கை விடவேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று போராட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. இந்த பொது வேலைநிறுத்தத்திற்கு ஐஎன்டியுசி, ஏஐடியுசி, சிஐடியு, தொமுச, யுடியுசி உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் துறைவாரியான அகில இந்திய சம்மேளனங்கள் மற்றும் சங்கங்களின் கூட்டு மேடை அறைகூவல் விடுத்துள்ளது. இந்த பிரம்மாண்டமான வேலைநிறுத்தத்திற்கு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் இயக்கங்களும் இடது சாரிக் கட்சிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இன்று காலை தொடங்கிய வேலை நிறுத்தம் சென்னை, கோவை மதுரை என தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
தென்சென்னை மாவட்டம் கிண்டியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை கோட்டத்தில் இயங்கும் 1470 அரசு பேருந்துகளில் சுமார் 20க்கும் குறைவான பேருந்துகளே இயங்குகிறது. சுமார் 98 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதேபோன்று கோவை மாவட்டத்தில் சுமார் 80 சதவீத ஆட்டோக்கள் இயங்கவில்லை. கோவை மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களான அக்வாசப், டெக்ஸ்மோ போன்ற தொழிற்சாலைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் மாநிலம் முழுவதும் பொது வேலை நிறுத்திற்கு தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது
போராட்டத்தின் ஒருபகுதியாக இன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை தலைமை தபால் நிலையம் முன்பு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 320 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.