மறைந்த மக்கள்குரல் மோகன் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் நிதி உதவி முதலமைச்சருக்கு டி.யூ.ஜெ. நன்றி!
சென்னை மே – 30 மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டின் முன்னாள் துணைத்தலைவரும்,மக்கள் குரல் நாளிதழின் மூத்த செய்தியாளரு மான தோழர் மோகன் வியாழனன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு பத்திரிகையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. இந்த துயரச்சம்பவம் பற்றி கேள்வி பட்டவுடன், தமிழக முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, இரங்கல் அறிக்கை வெளியிட்டதுடன். அவரது குடும்பத்துக்கு உடனடியாக, ரூ10 லட்சம் நிதி உதவி அளிக்க ஆணை பிறப்பித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த மனிதாபிமான உதவிக்கு, முதலமைச்சருக்கு, தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் சங்கத்தின் சார்பில், நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஆபத்தான நேரத்தில் பத்திரிகையாளர்கள் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் என்றும், பாதுகாப்பு அரணாக இருப்பார் என்கின்ற பெரும் நம்பிக்கை பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று டியூஜே தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் தெரிவித்துள்ளார். முன்னதாக மோகன் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம். சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கூட்டுறவு உர நிறுவனம் ரூ.3,811 கோடி லாபம்
சென்னை, மே 30- இந்திய விவசாயிகள் கூட்டுறவு உர நிறுவனமான இப்கோ 2024-25 நிதியாண்டில் ரூ.3,811 கோடி லாபம் ஈட்டியுள்ளது. மேலும் நானோ உரங்களின் விற்பனையை 47 சதவீதம் அதிகரித்துள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த கூட்டுறவுத் துறைக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். சங்கம் தொடர்ந்து மூன்று நிதியாண்டுகளாக ரூ.3,000 கோடிக்கும் அதிகமான லாபத்தைப் பதிவு செய்துள்ளது,” என்று புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இப்கோ தலைவர் திலீப் சங்கானி கூறினார். இந்த நிதியாண்டில் (2024-2025) முந்தைய நிதியாண்டில் (2023-2024) 248.95 லட்சம் நானோ உர பாட்டில்கள் விற்கப்பட்ட நிலையில், இந்த நிதியாண்டில் (2024-25) 365.09 லட்சம் பாட்டில்கள் விற்கப்பட்டன. இதன் மூலம் இப்கோ 24-25 நிதியாண்டில் ரூ.41,244 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த 23 ஆண்டுகளாக, அதன் உறுப்பினர்களுக்கு செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 20 சதவீத ஈவுத்தொகையை வெகுமதி அளித்து வருவதாகவும், இது சமமான நிலையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
கொலை வழக்கில் 9 ஆண்டுகளாக தலைமறைவு: இளைஞர் கைது
அம்பத்தூர், மே 30- சென்னையை அடுத்த சோழவரம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து பிரகாஷ் (35). இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் தேதி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். இந்த வழக்கில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு இறுதி அறிக்கை பொன்னேரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்கண்ட கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான செங்குன்றம், சோலை நகர், வாஞ்சிநாதன் முதல் தெருவைச் சேர்ந்த சுபாஷ் (32) என்பவர் வழக்கு சம்பந்தமாக தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து பொன்னேரி நீதிமன்றத்தால் சுபாஷ் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. தனிப்படை காவல் துறையினர் சுபாஷை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் வியாழக்கிழமை தலைமறைவாக இருந்த சுபாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 19 புறநகர் ரயில்கள் ரத்து
சென்னை, மே 30- பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மே 31, ஜூன் 2 தேதிகளில் 19 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. காலை 11.15 மணி முதல் மாலை 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் பயணிகள் வசதிக்காக மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர் இடையே 6 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளனது.