tamilnadu

img

எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு ஒன்றிய அரசின் முகமைகளை ஏவிவிடும் போக்கு:கே.பாலகிருஷ்ணன்

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.இது எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு ஒன்றிய அரசின் முகமைகளை ஏவிவிடும் போக்கு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் அத்து மீறி ரெய்டு மேற்கொண்ட மத்திய அமலாக்கத்துறை, நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது. இது ஒரு காட்டு தர்பார் நடந்து வருவதையே எடுத்துக்காட்டுகிறது.

எதிர்க் கட்சிகளை மிரட்டுவதற்கு ஒன்றிய அரசின் முகமைகளை ஏவிவிடும் போக்கின் ஒரு பகுதியாகவே இந்த கைது அமைந்துள்ளது. விசாரணை அமைப்புகளை பாஜகவின் கிளை அமைப்பாகவே மாற்றிவிட்டார்கள்.

தில்லியில், மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிராக பாலியல் குற்றம் இழைத்த பாஜக எம்.பி., பிர்ஜ் பூசன் சரண் சிங் மீது உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவரை பதவி விலகச் சொல்லவோ, கைது செய்யவோ ஒன்றிய பாஜக அரசு தயாரில்லை என்பதையும் இத்துடன் இணைத்து பார்க்க வேண்டும்.

மாநிலத்தின் அமைச்சர் என்ன அதுபோன்ற குற்றவாளியா அல்லது பயங்கரவாதியா? நள்ளிரவில், மனித உரிமைகளுக்கு விரோதமாக இந்த கைது நடவடிக்கையை ஏன் மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற அடக்குமுறைகளின் வழியாக எதிர்க் கட்சிகளை மிரட்டலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும். மக்கள் இதற்கெல்லாம் தக்க பதிலடி கொடுப்பார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.