மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வு 50%ஆக உயர்த்த வேண்டும் என்று 16-ஆவது நிதிக்குழு ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் 16-ஆவது நிதிக்குழுவுடனான ஆலோசனை கூட்டம் ஒன்றிய நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான இன்று நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "கடந்த 15-ஆவது நிதிக்குழு ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 41% ஆக உயர்த்தி அறிவித்த ஒன்றிய அரசு, தற்போது 33.16% வரி வருவாயை மட்டுமே பகிர்ந்து அளித்துள்ளது. முக்கியமான திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநில அரசுகளின் பங்கு முக்கியம். கூட்டாட்சி தத்துவம் மூலம் மாநிலங்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றன. நிதிப் பகிர்வு குறைவால் மாநில அரசுக்கு சுமை ஏற்படுகிறது. மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வு 50% ஆக உயர்த்த வேண்டும். சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை குறைப்பதால் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி பாதிக்கும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.