18-ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழகம் - புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும், திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி கைப்பற்றியது. கூட்டணியில் திமுக 21, காங்கிரஸ் 10, சிபிஎம் 2, சிபிஐ 2, விசிக 2, மதிமுக 1, ஐயுஎம்எல் 1, கொமதேக 1 என இடங்களைப் பெற்றன. இந்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து வெற்றிபெற்ற எம்.பி.க்கள் மக்களவையில் செவ்வாயன்று பதவியேற்றுக் கொண்டனர். முதல் நபராக பதவியேற்ற திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் அரசியல் சாசனப் புத்தகத்துடன் தமிழில் உறுதி மொழியேற்றார். ‘தலித்- ஆதிவாசிகள்-சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நிறுத்தக!’ என்றும் அவர் முழக்கமிட்டார். அதற்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார் பதவியேற்ற போது, அண்ணாமலையை தோற்கடித்தவர் என்று கூறி தமிழக எம்.பி.க்கள் பலமாக கைதட்டினர். மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் பதவியேற்ற போது, நீட்டை ரத்து செய்யுங்கள் என்று முழக்கமிட்டு மக்களவையை அதிர வைத்தார். கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. கோபிநாத்தைத் தவிர (அவர் தனது தாய்மொழியான தெலுங்கில் உறுதிமொழி ஏற்றார்.) அனைவரும் தமிழில் உறுதிமொழி ஏற்றனர். ஒரு சிலரைத் தவிர, மற்ற அனைவருமே கடவுளின் பெயரால் அல்லாமல், ‘உளமார’ என்று கூறியே பதவியேற்றனர். திமுக, மதிமுக, காங்கிரஸ் எம்.பி.க்களில் பெரும்பாலானோர் தமிழ் வாழ்க, தமிழ்நாடு வாழ்க; திராவிடம் வாழ்க, ஜனநாயகம் வாழ்க, மதச்சார்பின்மை வாழ்க, பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர், மு.க. ஸ்டாலின் வாழ்க! என்று கூறி பதவியேற்றனர். கூறினர். திமுக உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின் வாழ்க! என்றும் பதவியேற்பில் குறிப்பிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு. வெங்கடேசன், ஆர். சச்சிதானந்தம் ஆகியோர் தமிழ் வாழ்க; மார்க்சியம் வெல்க; தொழிலாளர் - விவசாயிகள் ஒற்றுமை ஓங்குக! என்று கூறி எம்.பி.யாகப் பதவியேற்றனர். சிபிஐ எம்.பி.க்கள் கே. சுப்பராயன், வை. செல்வராஜ் ஆகியோரும் மார்க்சியம் வெல்க! என்று கூறி பதவியேற்றனர். விசிக எம்.பி.க்கள் தொல். திருமாவளவன், து. ரவிக்குமார் ஆகியோர் அம்பேத்கர் வாழ்க, பெரியார் வாழ்க, ஜெய் பீம் என்று கூறி எம்.பி.யாக பதவியேற்றனர்.