tamilnadu

img

வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் காலமானார்!

சென்னை, செப். 10 - வணிகர் சங்க பேரவைத் தலைவர்  த. வெள்ளையன் காலமானார். அவருக்கு வயது 76.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவரான த. வெள்ளை யன் நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சனைகளால் சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 3-ஆம் தேதி உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

ஆரம்பத்தில் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 5-ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மருத்துவ நிபுணர் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலை யில் சிகிச்சை பலனின்றி செவ்வா யன்று காலமானார்.

உள்நாட்டு வணிகம், வணிகர்கள் நலனில் அக்கறை கொண்ட த. வெள்ளையன், தாராளமய பொருளா தார கொள்கைகளுக்கு எதிராகவும், நேரடி அந்நிய முதலீடு, ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பன்னாட்டு கார்ப்ப ரேட் நிறுவனங்களின் கொள்ளைக்கு எதிராகவும் மாநாடுகள், போராட்டங் களை நடத்தி வந்தவர் ஆவார். இடது சாரிகள் முன்வைக்கும் பொருளா தாரக் கொள்கைகளே நாட்டின் தொழில்- வணிகத்தைப் பாதுகாக்கும் என்று உறுதியாக நம்பியவர். இடது சாரிகளை நேசத்துடன் ஆதரித்த வர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் கூட வணிகர்கள் அனை வரும் இடதுசாரி வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டவர் என்பது குறிப் பிடத்தக்கது. அவரது மறைவுக்கு சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை, மமக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ, வணிகர் சங்கப் பேரமை ப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.   வெள்ளையன் அவர்களின் உடல்  புதன்கிழமை மாலை 4 மணி  வரை பெரம்பூர் வணிகர் சங்க அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. 

அதன் பிறகு வெள்ளையனின் சொந்த ஊரான திருச்செந்தூர் உச்சிவிளை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

வணிகர்கள் - ஜனநாயக இயக்கங்களுக்கு இழப்பு
மார்க்சிஸ்ட் கட்சி இரங்கல்!

வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்ற செய்தி  மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. வணிகர்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அரும்பாடுபட்டவர். ஒன்றிய - மாநில அரசுகளின் தாராளமயக் கொள்கைகள் மற்றும் வணிகர்களை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகம், வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் நுழைவைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களிலும், ஜனநாயக இயக்கங்களிலும் கலந்து கொண்டு குரலெழுப்பியவர். அவரது மறைவு வணிகர்களுக்கும், ஜனநாயக இயக்கங்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வணிகர் சங்கத்தினருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது” என்று அந்த அறிக்கையில் கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், காவிரி நதி நீர் பிரச்சனை, ஹைட்ரோ கார்பன் விவகாரங்களின் போது விவசாயிகள் சங்கங்கள் நடத்திய முழு அடைப்புப் போராட்டங்களுக்கு முழு ஆதரவு தெரிவித்து வணிகர்களையும் பங்கெடுக்கச் செய்தவர் த.வெள்ளையன் என்று குறிப்பிட்டுள்ளார்.