சென்னை,ஜூன் 18- சென்னையில் பல்வேறு இடங்க ளில் திங்களன்று ( ஜூன்17) நள்ளிர வில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்தது.
பல இடங்களில் பலத்த சூறைக் காற்று வீசியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நள்ளிரவில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. கிண்டி, அசோக் நகர், ஆலந்தூர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், மைலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இடி மற்றும் மின்னலின் தாக்கமும் கடுமையாக இருந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
அதே போல குன்றத்தூர், தாம்பரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பெய்த இந்த திடீர் மழையால் பல இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. சென்னையில் அதிகபட்சமாக பூந்த மல்லியில் 10.4 செ.மீ மழையும், சோழிங்கநல்லூரில் 8.2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.