tamilnadu

img

ஸ்டெர்லைட் போராட்டம்.. அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து....

சென்னை:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் அரசியல் தலைவர்கள் மீது தொடரப்பட்ட 38 வழக்குகளை திரும்பப்பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடியில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, முதல்வரிடம் 14-5-2021 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமை யிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை அரசு கவனமாகப் பரிசீலித்தது. ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், முதல்வர் 21-5-2021 அன்று வெளியிட்டஅறிவிப்பின்படி, மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர 38 வழக்குகளைத் திரும்பப் பெற்றிடவும், அதில் தொடர்புடைய கீழ்க்கண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற்றிட உத்தரவிட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா, திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன்.டி.டி.வி.தினகரன், தேமுதிக தலைவர்கள் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அழகு முத்துபாண்டியன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், திமுக ஒன்றிய செயலாளர் பால சிங், ஆம் ஆத்மி கட்சி  ஆர்தர் மச்சோடா, ஹென்றி தாமஸ் ஆகிய 13 பேர் மீதான வழக்குகளில் சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்குகளை தவிர்த்து மற்ற வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

;