சமூகச் செயற்பாட்டாளர் தோழர் சுசீலா மறைவிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத்தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மாணவப் பருவந்தொட்டே இடதுசாரி இயக்கங்களில் பங்கெடுத்து வந்தவரும் வழக்கறிஞரும் தமுஎகச தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான தோழர் சுசீலா அவர்களின் அகால மரணம் அதிர்ச்சியளிக்கிறது.
பன்முக ஆளுமையும் பரந்த நட்புவட்டமும் தோழமையும் கொண்டவர் சுசீலா. இழப்புகளையும் சவால்களையும் தீரமுடன் எதிர்கொண்டவர். குழந்தைகள் நலன், பெண்ணுரிமை, தொழிலாளர் நலன் சார்ந்த பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தவர். பொது நிகழ்வுகளிலும் ஊடகங்களிலும் தனது கருத்துகளை வலுவாக முன்வைத்தவர். நாடகக் கலைஞர்.
2015 சென்னை பெருவெள்ளம், கொரானா பொதுமுடக்கம் போன்ற நெருக்கடியான நேரங்களில் பல்வேறு உதவிகளை மேற்கொண்டவர். கடந்த இரண்டு நாட்களாக மிக்ஜாம் புயலின் தொடர் மழையால் சென்னை சுற்றுவட்டாரமே மூழ்கிக்கிடந்த நிலையிலும்கூட பாதிப்பு மற்றும் மீட்புப்பணிகள் குறித்த பல தகவல்களை தனது சமூக ஊடகப் பக்கங்களில் இறப்பதற்கு சற்று முன்புவரை பரிதவிப்புடன் பகிர்ந்துகொண்டிருந்திருக்கிறார். நேற்றிரவு தீவிர மாரடைப்பிற்காளாகி, இந்தப் பெருமழையினால் உடனடி மருத்துவ உதவியைப் பெறமுடியாமல் நம்மைவிட்டுப் பிரிந்துள்ள தோழர் சுசீலா மருத்துவ ஆய்வுகளுக்காக தனது உடலை விட்டுச்சென்றுள்ளார்.
சமூகம் பயனுற வாழ்ந்தமைக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார் தோழர் சுசீலா. அவரை இழந்துவாடும் வாழ்விணையர் தோழர் விஜயானந்த் மகன்கள் திலீபன், நந்தன் மற்றும் குடும்பத்தார் ஆகியோரது துயரில் தமுஎகச பங்கெடுக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.