சென்னை,செப்.25- பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் வாக்கு மூலத்தை சமூக வலைதளங்களில் வெளி யிட்டது யார்? என்று அரசு தரப்புக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த 10 வயது சிறுமியை, தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப் பட்டது. இதுதொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது, அவர்களை காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் மிரட்டி, தாக்கியதாக வீடியோ வெளியானது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந் தார். அதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணி யம் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடு்த்து விசாரித்து வருகிறது. அதேபோல சிறுமியின் தாயாரும் தனியாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் பதில் மனுவை தாக்கல் செய்த மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ‘‘போலீஸார் அடித்ததாக கூறப்படுவது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றச்சாட்டுக்குள்ளான காவல் ஆய்வாளர் ராஜி இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். உண்மையில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளவும், வெளிப் படையாக கூற இயலாத சில விஷயங் களை விவரிக்கவும் இந்த வழக்கை ரகசிய விசாரணையாக சேம்பரில் வைத்து விசாரிக்க வேண்டும்’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘பாதிக்கப்பட்ட சிறுமியிடம் காவல் ஆய்வா ளர் பெற்ற வாக்குமூலம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது எப்படி? அதை வெளியிட்டது யார்?’’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ராஜிதான் அந்த ஆடியோவை வெளியிட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தெரிவித்தார். அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் காவல்துறையின் பதில் மனுவுக்கு மனுதாரர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 1 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.