'நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது?’ என்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி கைது செய்தது. இதை அடுத்து அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கபில் சிபல், "நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது?" என்று விசாரணையின் போது அமலாக்கத்துறை கேட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், “செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகளுக்கு முன்பானது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சியும் கூறவில்லை. வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஆண்டிலிருந்து தற்போது வரை வருமான வரி செலுத்தியுள்ளார் என்பதையும் வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.” எனவும் கபில் சிபல் வாதாடினார்.
இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீது வரும் 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.