சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய நீதிமன்ற காவல் ஆக.7 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து தன்னை விடுவிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டு, வழக்கை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.