செங்கல்பட்டு, செப்.11- சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி புதனன்று (செப் 11) துவங்கியது. 6 ஆயிரத்து 303 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். இதன் நீர் மட்டம் 24 அடியாகும். தற்போது திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம், பழந்தண்டலம், சிறுகளத்தூர்ஆகிய பகுதிகளில் 1,000 ஏக்கர் விவசாயத்தி ற்கு மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவ மழை குறைவாகப் பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது. நீரின் அளவுகுறைந்ததால் ஏப்ரல் மாதம் முதல் சென்னைக்குக் குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதையடுத்து சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து தினமும் 3 கோடி லிட்டர் தண்ணீரைச் சுத்திகரிப்பு செய்து சென்னைக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் 15 ஆண்டுகள் கழித்து செம்பரம்பாக்கம் ஏரி முழுமையாக வறண்டதால் அதனைத் தூர்வாரி ஆழப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான அரசாணை யும் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏரியைத் தூர்வாரும் பணியை புதனன்று (செப்.11) மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனி ஆகியோர் துவக்கிவைத்தனர். இது குறித்து ஆட்சியர் பொன்னையாக கூறுகையில், ‘இந்த ஏரியைத் தூர்வாருவதன் மூலம் அரசுக்கு ரூ.191.27 கோடி வருமானம் கிடைக்கும். இத்திட்டத்தின் படி 6,303 ஏக்கர் பரப்பளவிற்கு ஒரு மீட்டர் ஆழத்திற்குத் தூர்வாரப்படும். இந்த பணி 8 ஆண்டுகள் நடைபெறும். மேலும் மொத்தம் 25.30 லட்சம் லோடு மண் வெளியேற்றப்படும். இதன் மூலம் 536 மில்லியன் கன அடி கொள்ளளவு மீட்கப்பட்டு, கூடுதலாக 56.50 கோடி லிட்டர் தண்ணீரைத் தேக்க முடியும்’ என்றார்.