கடலூர், ஜூன் 12- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிப்பெண் கணக்கிடுவதற்காக வருகைப் பதிவேட்டை பள்ளிகள் ஒப்படைத்துள்ளன. தமிழகம் முழுவதும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரையிலும், மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரையிலும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரையிலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 24ஆம் தேதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் அன்று நடைபெறவிருந்த தேர்வுகளும், அதன் பின்னர் நடைபெற விருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. தொற்று பரவல் அதிகரிக்கவே 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து, அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் 18,341 மாணவர்கள், 17,205 மாணவிகள் மொத்தம் 35,546 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் உயர்கல்விக்குச் செல்வதற்கு மதிப்பெண் தேவைப்படுவதால் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை 80 மதிப்பெண்களுக்கு மதிப்பிடுவதோடு அவர்களின் வருகைப் பதிவேட்டைப் பொறுத்து மீதமுள்ள 20 மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.ரோஸ்நிர்மலா கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு மாணவர்களை அனுப்பும் 439 பள்ளிகளும் தங்களது வருகைப்பதிவேட்டினை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க நேரம் ஒதுக்கியுள்ளோம். அவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூன் 12) இதனை ஒப்படைக்க வேண்டும். அதனடிப்ப டையில் மதிப்பெண் கணக்கிடப்படும். இதற்காக வருகைப்பதி வேட்டில் ஏதாவது திருத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்காணிப்போம். அவ்வாறு ஏதாவது நடந்திருந்தால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.