மார்க்சியச் சூழலில் பிறந்து வளர்ந்த சப்தர் ஹஷ்மி, அலிகாரிலும் பின்னர் தில்லி யிலும் வளர்ந்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்த அவர், இந்திய மாணவர் சங்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தார். 1973 இல் தனது 19 ஆவது வயதில் அமெச்சூர் நாடக பயிற்சியாளர்களுடன் இணைந்து ஜன நாட்டிய மன்ச்சை (ஜனம்) நிறுவினார்.
இதன் குறிக்கோள் நாடகத்தை மக்களிடம் கொண்டு செல்வது. 1983 இல் முழுநேர நாடக ஆர்வலராக மாறுவதற்கு முன்பு புதுதில்லியில் உள்ள மேற்குவங்க தகவல் மையத்தில் செய்தித் தகவல் அதிகாரியாக பணியாற்றினார். ஹஷ்மியின் தலைமையில் ‘ஜனம்’ பல நாடகங்களை நிகழ்த்தியது. குறுகிய காலத்தில் 24 நாடகங்களை, 4000 முறை தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் வீதி நாடகங்களாக அரங்கேற்றி மக்களின் பிரச்சனைகளை எடுத்துக் காட்டி பரப்புரை செய்தார்.
1989 ஜன.1 அன்று உலகம் முழுவதும் புத்தாண்டைக் கொண்டாடிய போது, இவரும் இவரது நாடகக் குழுவும் உத்தரப் பிரதேசத்தில் ஜந்தாபூர் என்ற கிராமத்திற்கு ‘ஹல்லா போல்’ (உரக்கப் பேசு) என்ற தெரு நாடகத்தை நடத்துவதற்காகச் சென்றனர்.
இதன்மூலம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆதரித்தனர். 34 வயதான சப்தர் ஹஷ்மி இந்த நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது, குண்டர்கள் இவரை கடுமையாகத் தாக்கியதில், படுகாயமடைந்த நிலையில் மறுநாள் ஹஷ்மி உயிரிழந்தார். ஹஷ்மியின் மறைவுக்கு இரண்டு நாட்களுக்குப் பின், அவரது மனைவி மாலா ஸ்ரீ தலைமையில், ஜனம் நாடகக் குழு மீண்டும் ஜந்தாபூருக்குச் சென்று அந்த நாடகத்தை நடித்தது. ஜந்தாபூரில் வன்முறை நடந்த இடத்தில் நூற்றுக்கணக்கானோர் சப்தர் ஹஷ்மிக்காக ஒற்றுமையுடன் கூடியிருந்தனர்.