சென்னை:
கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்புநிலைக்கு திரும்பி வரும் நிலையில், அரசு, தனியார் மற்றும் முறைசாராத் தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல ஏதுவாக சென்னை புறநகர் மின்சார ரயிலை இயக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிஐடியு தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு கூட்டம் நவம்பர் 2,3 ஆகிய தேதிகளில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால் மக்கள்சகஜ நிலைக்கு திரும்பி வரும் சூழ்நிலையில் அரசு, தனியார் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக இடம் விட்டு இடம் சென்று பணிபுரிய வேண்டியுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கற்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சென்னை மாநகரத்துக்குள் வந்து செல்ல வேண்டியுள்ளது. பொதுப் போக்குவரத்தும் முழுமையாக இல்லாததால் பணியிடங்களுக்கு பெரும் சிரமத்திற்கு மத்தியில் செல்ல முடியாத நிலையை கருத்தில் கொண்டு சென்னை புறநகர் மின்சார ரயிலை இயக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தொழிலாளர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுக!
கொரோனா ஊரடங்கினால் தனியார்நிறுவனங்கள் மற்றும் முறைசாரா தொழில்களில் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்வாதாரத்தை இழந்தனர்.குறிப்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது அடிப்படை தேவைகளுக்குக்கூட நிவாரணம் வழங்கி பாதுகாக்க ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக நாடாளுமன்றத்தில் தொழி
லாளர் சட்டத் திருத்தங்கள், வேளாண் சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள்தனியார்மயப்படுத்தல் என அனைத்து பகுதி உழைப்பாளி மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்வாரி சம்மேளனங்கள் இணைந்து நவம்பர் 26 ஆம் தேதி நடத்தவுள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப்போராட்டத்தை தமிழகத்தில் வெற்றிபெற செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக ரீதியில் கொரோனா விதிகளுக்குட் பட்டு சமூக இடைவெளியை பின்பற்றி நடத்திய போராட்டங்களில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தமிழக அரசு, தொழிலாளர் கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்.
நலவாரிய பிரச்சனைக்கு தீர்வுகாண்க!
தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான முறைசாரா தொழிலாளர் களின் சமூக பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட நல வாரியங்களில் கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி பதிவு, புதுப்பித்தல் பணிகளை ஆன்லைனில் மேற்கொள்வது என்று அரசு முடிவெடுத்துள்ளது. இந்த ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவதில் உள்ள நடைமுறை பிரச்சனைகளை சரிப்படுத்தவும், கிராமப்புற, படிப்பறிவற்ற தொழிலாளர்கள் எளிதில் பதிவு செய்யும் வகையிலும் ஆன்லைன் முறையை எளிமைப்படுத்த வேண்டும். நல வாரியங்களில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண மாநில அளவிலான தொழிற் சங்க கூட்டத்தை நடத்தவும், மாவட்டஅளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ள கண்காணிப்புக்குழுக்களை உடனடியாக நடத்தவும் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.
ரப்பர் கழக நிலங்களை வனத்துறைக்கு தாரை வார்க்காதே!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு ரப்பர் கழகத்தொழிலாளர்களின் ஊதிய மாற்று பேச்சுவார்த்தை ரப்பர் கழக நிர்வாகம், அமைச்சர் மட்ட பேச்சுவார்த்தை என கொரோனா ஊரடங்கிற்கு முன்பு நடைபெற்ற நிலையில் கடந்த 6 மாதகாலமாக ஊதியஉயர்வு குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசுரப்பர் கழகத்துக்கு சொந்தமான நிலங்களை வனத்துறைக்கு தாரை வார்க்கும்நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தரணி சர்க்கரை ஆலைத்தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ஊதியநிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்தி தலைமைச் செயலகம் நோக்கி நடைப்பயணப்போராட்டத்தின் போது மாவட்ட நிர்வாகத்தின் முன்னிலையில் ஆலை நிர்வாகம் ஒப்புக்கொண்டபடி ஊதியம் வழங்க மறுத்துவருவது கடும் கண்டனத்திற்குரியது. இதில் தமிழக அரசு தலையிட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசுஅரசாணையின்படி குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். பஞ்சாயத்துக்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும். சென்னை மாநகராட்சியில் அரசாணையின்படி ஊதியத்தை வழங்க வலியுறுத்தி நடத்திய போராட்டத்தின் போது 7 முன்னணி நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட தற்காலிகபணிநீக்க பழிவாங்கல் நடவடிக்கை யினை மாநகராட்சி நிர்வாகம் திரும்பப்பெற வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு நியாயவிலைக்கடை ஊழியர்களின் ஊதிய உயர்வு ஆணை அக்டோபர் மாதத்துடன் நிறைவடைகிறது. புதிய ஊதிய உயர்வு வழங்குவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேசி புதிய ஊதிய உயர்வை அறிவித்து அமலாக்கிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.