கடலூர், மே 10-கரும்பு விவசாயிகள் பெயரில் ரூ.88.51 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் சர்க்கரை ஆலை அதிபரிடம் 2ஆவது நாளாக விசாரணை நடைபெற்றது.சென்னை கோட்டூர் புரத்தை சேர்ந்த ராம்.வி.தியாகராஜன் (68). இவர் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகிலுள்ள இறையூரில் ஸ்ரீஅம்பிகா சர்க்கரை ஆலை, வேப்பூர் வட்டம் ஏ.சித்தூரில் திருஆரூரான் சர்க்கரை ஆலைகளை நடத்தி வருகிறார். இவருடைய சர்க்கரை ஆலைகளில் கடந்த 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் 11,523 கரும்பு விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்துள்ளார். இந்த கரும்புக்கான தொகை, வெட்டுக்கூலி மற்றும் போக்குவரத்து வாடகை ஆகியவற்றை வழங்கவேண்டிய நிலையில் அவற்றை வழங்காமல் விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிகளில் கரும்பு விவசாயிகளின் பெயரில் அவர்களுக்குத் தெரியாமல் ரூ.88.51 கோடி கடன் பெற்றுள்ளார்.இதுகுறித்து, வேப்பூர் அருகேயுள்ள கச்சிமயிலூரைச் சேர்ந்த சண்முகம் மகன் ஸ்டாலின் (36) என்பவர் தனது பெயரில் ரூ.18 லட்சம் கடன் பெற்று மோசடி நடைபெற்றுள்ளதாக கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வனிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு மாவட்ட காவல் துறைக்கு ஆட்சியர் பரிந்துரைத்ததன் பேரில் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணின் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் பி.பழனி அண்மையில் வழக்குப்பதிவு செய்தார்.விசாரணையில், ஆலையின் உரிமையாளர் ராம்.வி.தியாகராஜன் கரும்பு விவசாயிகள் பெயரில் ரூ.88.51 கோடி போலி ஆவணங்கள் மூலம் வங்கி கடன் பெற்று நம்பிக்கை மோசடி செய்திருப்பதை தெரிய வந்தது. எனவே, அவரை சென்னை கோட்டூர்புரத்திலிருந்து கடலூருக்கு அழைத்து வந்து புதன்கிழமையன்று விசாரணை நடத்தினார். இந்த விசாரணை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்தது.விசாரணை குறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், விசாரணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை மற்றும் வங்கியில் பெற்றுள்ள கடன் தொகையை கட்டி விடுவதாக ராம்.வி.தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதற் காக, காலக்கெடு கேட்டுள் ளார். எனினும், சட்டப்படியான முறையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தான் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்பதால் அதுவரையில் அவர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பார்.அதேநேரத்தில் இந்த மோசடியில் வங்கிகளின் உயர் அலுவலர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்காக, பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து அவர்களது வாக்குமூலத்தையும் பெற்று வருகிறோம். இதில், ஏராளமான விவசாயிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அந்த வாக்குமூலத்தில் அடிப்படையில் வங்கிக்கு உள்ள தொடர்பு குறித்தும் தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது. முழு விசாரணையில் சர்க்கரை ஆலை அதிபர் மட்டுமல்லாமல் நிர்வாக உயர் அலுவலர்கள், வங்கி அலுவலர்களும் சிக்குவார்கள் என்று தெரிவித்தனர்.
விற்பனை செய்ய முடிவு
தற்போது மோசடி புகாருக்கு உள்ளாகியுள்ள ராம். வி.தியாகராஜனுக்கு மொத்தமாக 4 ஆலைகள் உள்ளன. இதில், கடலூர் மாவட்டத்திலுள்ள 2 ஆலைகளும் தற்போது மூடப்பட்டுள்ளன. இதில் ஒரு ஆலையை விற்பனை செய்து விட்டு அதன் மூலமாக கிடைக்கும் பணத்தில் கடனை அடைக்க அவர் திட்டமிட்டிருப்பதாக ஆலை நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.