tamilnadu

img

6 மாதத்தில் சிதலமடைந்த சாலை அரசு அலுவலகம் முற்றுகை

திருவள்ளூர், நவ.18-   நத்தம் பகுதியில் அமைக்கப்பட்ட  சாலை  6 மாதத்தில் சிதலமடைந்ததை கண்டித்து அப்பகுதிமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள தேர்வழி, ஆத்துப்பாக்கம், நத்தம் வழியாக மேலகழனி வரை 3 கிலோ மீட்டர் தூரம் வரை  ஒன்றிய சாலை அமைந்துள்ளது. இச்சாலை மிகவும் மோசமாக இருந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனைத் தொடர்ந்து  ஒன்றிய நிதியிலிருந்து ரூ. 62 லட்சம் தார்ச் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.  பின்னர் அதிமுகவை சேர்ந்த அபிராமன் என்பவர் இச்சாலைப் பணியை மேற்கொண்டார். சாலை அமைக்கும் போதே முறையாகவும், தரமாக  அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர். அப்போது அதிகாரிகளும் எதுவும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தார்ச் சாலை அமைத்த 6 மாதத்திலேயே  குண்டும், குழியுமாக சிதலமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியில் இயங்கி வந்த அரசு பேருந்தும் நிறுத்தப்பட்டுள்ளது.   பாதிக்கப்பட்ட அக்கிராம மக்கள் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திங்களன்று (நவ. 18)  பொது மக்கள் முற்றுகையிட்டனர்.  பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சீரழிந்துள்ள சாலையையும், சிறு பாலத்தையும் அடுத்த ஒரு மாதத்தில் சீரமைக்கப்படும் என ஒன்றிய பொறியாளர் நரசிம்மன் எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தார். இந்த போராட்டத்திற்கு சின்ன நத்தம்  ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். இதில் சிபிஎம் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், ஜெயவேல், ஆறுமுகம், கோவிந்தராஜன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.