tamilnadu

10 சதவீத இடஒதுக்கீடு அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஜூலை 2 - முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சட்டப்பேரவையில் செவ்வாயன்று (ஜூலை 2) கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க் கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு பிறகு விளக்கம் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இந்த இடஒதுக்கீடு குறித்து மாநில அரசுக்கு மத்திய அரசு ஒரு கடிதம்  அனுப்பியுள்ளது. இதை இந்த அவைக்கு தெரிவிப்பது அரசின் கடமை. அந்த அடிப்படையில்தான் நாங்கள் இங்கு தெரிவித்து உள்ளோம். நாங்கள் இதை ஆதரிக்கிறோம், எதிர்க்கிறோம் என்றெல்லாம் கிடையாது” என்றார். இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த கட்சிகள் எண்ணங்களின் அடிப்படையில் அரசு செயல்படும். தமிழக அரசை பொறுத்த வரைக்கும் மத்திய அரசு என்னென்ன திட்டங்கள் வாயிலாக மருத்துவப் படிப்புக் கான இடங்கள் வரும் என்று ஒரு அறிக்கையை எல்லா மாநிலங்களுக்கும் கொடுத்து உள்ளார்கள்.  தமிழகத்துக்கும் அது வந்துள்ளது. அந்த அடிப்படையில் தான் சுகாதாரத்துறை அமைச்சர் கருத்துகளை தெரிவித்துள்ளார். எம்.பி.பி.எஸ். படிப்பில் 1000 இடங்கள் என்றால் 150 இடங்கள் அகில இந்திய கோட்  டாவுக்கு சென்று விடும். மீதம் 850 இடங்கள் இருக்கிறது. இதில் கிட்டத்தட்ட 264 இடங்கள் உயர் சாதி வகுப்பினருக்கு போய் விடும். மீதி 586 இடங்கள் 69 சதவீத இடஒதுக்கீட்டில் வரும் என்று சொல்கிறார்கள். இதைத்தான் அவையின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். எனவே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து இதில் என்ன செய்யலாம் என்று அனைவரின் கருத்தின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.