திருவண்ணாமலை, ஆக. 30- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தைப் பிரித்து, பெரணமல்லூரை தலை மையிடமாகக் கொண்டு தனி வருவாய் வட்டம் அமைக்க கோரிக்கை இயக்கம் நடத்தப்பட்டது. பெரணமல்லூர் தாலுகாவை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி, பெரணமல்லூரில் அனைத்துக் கட்சி சார்பில் கோட்டை மூலையில் இருந்து பேரணியாகச் சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டக்குழு உறுப்பினர் பெரணமல்லூர் சேகரன், நகரச் செயலாளர் இரா.ராஜசேகரன், முருகன், உதயகுமார், புண்ணியக்கோட்டி, ரத்தன்ராஜ், மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் அஞ்சலி, ஜெகன்நாதன், அதிமுக ஒன்றியச் செயலாளர் ஜி.செல்வராஜ், நகரச் செயலாளர் மூர்த்தி, கஜேந்திரன், திமுக நகரச் செயலாளர் அரி, கே.டி.ராமசாமி, பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் அண்ணாதுரை, காங்கிரஸ் கட்சி நிர்வாகி பாலையா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆங்கிலேயர் காலத்தில் சப்கோர்ட் இருந்த ஊர் பெரணமல்லூர். சட்டமன்றத் தொகுதி அந்தஸ்து பறிக்கப்பட்ட நிலையில் தாலுகா அந்தஸ்தும் கொடுக்கப்படாமல் பெரணமல்லூர் தொடர்ந்து வஞசிக்கப்படுவதாகவும், பின்தங்கியுள்ள பெரணமல்லூர் பகுதியை வளர்ச்சிப் பாதையில் பயணிக்கச் செய்ய தனித் தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.