tamilnadu

கல்வியில் சமயப் பாடங்களைத் திணிப்பது கூடாது; முருகன் மாநாட்டுத் தீர்மானங்களை திரும்பப் பெறுக!

சென்னை, ஆக. 28 - “கல்வியில் சமயப் பாடங்களைத் திணிக்கும்  வகையில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங் களைத் திரும்பப் பெற வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, செவ்வாயன்று (ஆக. 27)  நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில்  ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் பழனியில் ‘முத்தமிழ் முருகன் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. 

ஏற்றுக்கொள்ள முடியாத  மாநாட்டுத் தீர்மானங்கள்!

அதில் “முருகன் திருக்கோயில்களில் மாணவ - மாணவிகளைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது, இந்தத்துறையின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு  ஆன்மீகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்துவது, துறையின் கீழ் நடத்தப்படும் கல்விநிலையங் களில் முருக பக்தி இலக்கியங்களை மையப் படுத்தி போட்டிகள் நடத்துவது” என்பன போன்ற தீர்மானங்கள் ஏற்கத்தக்கவை அல்ல.

மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை ஆகும். எந்த ஒரு மதக் கோட்பாட்டை யும் பரப்புவது அரசின் பணியாக இருக்கக் கூடாது. மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். 

மாணவர்களின் அறிவியல்  சிந்தனைக்கு எதிரானது!

தமிழகம் கல்வித்துறையில் மதச்சார் பின்மை மிக்க மாநிலமாக திகழ்கிறது. அது மட்டுமின்றி, தமிழகத்திற்கு என்று தனி கல்விக் கொள்கை அறிவித்து அதற்கான நிபுணர்  குழுவையும் அமைத்து அதன் பரிந்துரை களையும் அரசு பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது முருகன் மாநாட்டு தீர்மானங்கள்  கல்வி யை மதச்சார்புடையதாக்குவது மட்டுமின்றி மாணவர்களையும் அறிவியல் சிந்தனைக்கு எதிராக வளர்த்தெடுக்கவே பயன்படும்.

மேலும் மாணவர்களை மத ரீதியாக பிளவுபடுத்துவது, மதச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிகளுக்கு எதிராக அமைந்துள்ளது என்பதை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

வலதுசாரி சக்திகளுக்கு  துணை போய்விடக் கூடாது

கோவில் சொத்துக்களை கொள்ளை யடிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத் துறையை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரங்கள் கலகங்களை ஏற்படுத்தி வருகின்றனர். இதை முறியடிக்கும் நோக்கத்தில் அரசுப் பணிகளை மேற்கொள்வதை விடுத்து, அறிவியலுக்கும், மதச்சார்பின்மைக்கும் ஊறுவிளைவிக்கும் வகையிலும், பிற்போக்கு வலதுசாரி சக்திகளுக்கு ஆதரவாகவும் இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவது ஏற்புடையதல்ல.

கல்வியில் சமயப் பாடங்களை புகுத்தும் முருகன் மாநாட்டு தீர்மானங்களை செயல் படுத்தக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்து கிறது.

இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.