tamilnadu

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா ஆளுநருக்கு அனுப்பிவைப்பு....

சென்னை:
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் அரசு அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. அதன்படி தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்று எதிர்பார்க்கிறோம். ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுக சொன்னதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும், சட்டமன்ற முதல் கூட்டத் தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று சொன்னோம். நாங்கள் சொன்னதை செய்திருக்கிறோம். சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக அ.தி.மு.க. கொண்டு வந்த மசோதாவுக்கும், திமுக கொண்டு வந்துள்ள மசோதாவுக்கும் வித்தியாசம் உள்ளது.நீட் பாதிப்புகள் குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் கருத்து கேட்டது. அதன் அடிப்படையில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சட்ட நிபுணர்களின் கருத்துக்கள், உயர்மட்ட அதிகாரிக ளின் கருத்துக்கள் இடம் பெற்று உள்ளன. களநிலவரம் நிச்சயமாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நிச்சயமாக குடியரசுத் தலைவரும் புறந்தள்ளமாட்டார். திமுக அரசு கொண்டு வந்துள்ள மசோதாவில் 86 ஆயிரம் பேர்களின் கருத்துக்கள், நீதிபதி ராஜன் கமிட்டியின் கருத்து போன்றவை இணைக்கப்பட்டு உள்ளன.கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 12 ஆம் தேதி நடந்த மெகா தடுப்பூசி முகாம் போல வருகிற 17 ஆம் தேதியும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

;