tamilnadu

img

ரேசன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும்... முதலமைச்சர் அறிவுறுத்தல்....

சென்னை:
“நியாய விலைக்கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைக்க வேண்டும்”கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட் டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் நலனுக்காகக் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களான நியாயவிலைக்கடைகள், குடும்ப அட்டை வழங்குதல், உணவுப் பொருட்கள் விநியோகம்.
சிறப்பு பொது விநியோகத்திட்டம், நியாய விலைக்கடைகளைக் கணினிமயமாக்கல், கைவிரல் ரேகைப்பதிவு, குடும்ப அட்டை மாற் றம், பல்பொருள் அங்காடிகளில் தரமான பொருட்களை வழங்குதல்.கொரோனா காலத்தில் அரசின் நலத்திட்டங்களான உணவுப் பொருட் கள் மற்றும்  நிவாரணத் தொகையினைப் பொது மக்களுக்கு வழங்குதல் மற்றும் தற்போது செயல்படுத்தப் பட்டு வரும் நலத் திட்டங்கள், நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமையன்று ஜூலை 3 சென்னை  தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.    

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர், “பொதுமக்களுக்கு நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றிக் கிடைக்க வேண்டும், பொருட்களின் தரம் உறுதி செய்ய வேண்டும், குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிப்பவர்களுக்குக் காலதாமதமின்றி குடும்ப அட்டைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவிட் பெருந்தொற்று காலத்தில் கடனுதவி கோரும் சுய உதவிக் குழுக்கள், சிறு வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் தொழில்முனைவோர் போன்றவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கூட்டுறவு சங்கங்கள் கடன் வழங்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார்.    

பொது விநியோகத்திட்டத்தை முழுவதும் கணினிமயமாக்குதல், பல துறைகள் மூலம் நடத்தப்படும்  நியாய விலைக்கடைகளை ஒரே துறையின்கீழ் கொண்டு வரவேண்டும், வாடகைக் கட்டிடங்களில் செயல்படும் நியாய விலைக்கடைகளுக்குச் சொந்த கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.பெண் பணியாளர்களுக்கு அடிப் படை வசதிகள், சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்துதல், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நெல் ஆகியவற்றை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லப்படுவதை இணைய வழியில் கண்காணித்தல், எடைக்குறைவு போன்றவற்றைக் களைதல், தரமான சேவையினைப் பொதுமக்களுக்கு வழங்குதல் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் இ. பெரியசாமி, அர. சக்கரபாணி, தலைமைச் செயலாளர்  வெ. இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருட்டிணன், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

;