புதுச்சேரி, ஜூன்11- பாகூரில் இலவச மனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்த வர்களுக்கு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி ஆட்சியர் உறுதியளித்தார்.
புதுச்சேரி பாகூர் கொம்யூனில் இலவச மனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு மனை பட்டா வழங்க வேண்டும். கரையாம்பத்தூர் பகுதியில் நில ஆர்ஜிதம் செய்து பட்டா வழங்கிய நபர்களுக்கு இடத்தை தேர்வு செய்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் கொம்யூன் கமிட்டி சார்பில் புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
போராட்டத்திற்கு முன்னதாக புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன், சிபிஎம் மாநில தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையில், மாநில செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், தமிழ்ச்செல்வன், பிரபுராஜ், பாகூர் கொம்யூன் கமிட்டி செயலாளர் சரவணன், மாநில குழு உறுப்பினர்கள் கலியன், இளவரசி ஆகியோரின் பங்கேற்றனர்.
கரையாம்புத்தூரில் நிலம் எடுத்து பட்டா வழங்கிய இடத்தில் நில அளவைத் துறை மூலம் நிலத்தை அளந்து உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படும். மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்ட பாகூர், அரங்கனூர், மணப்பட்டு ஆகிய கிராமங்களில் பயனாளிகள் கணக்கெடுத்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாகூர் கொம்யூன் முழுவதும் உள்ள வீடற்ற மக்க ளுக்கு குடிமனை பட்டா வழங்க உரிய கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தார். மாவட்ட ஆட்சியரின் உறுதியை ஏற்று நடைபெற இருந்த குடியேறும் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக சிபிஎம் தலைவர்கள் தெரி வித்துள்ளனர்.