பொன்னேரி, மே 20-மீஞ்சூர் அருகே அதானி குழுமத்தின் துறைமுகத்தில் சரக்குகளை கையாளுவதற்காக தொடர்வண்டி இருப்புப் பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திங்களன்று (மே 20) போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் அதானி குழுமத்தின் ஏற்றுமதி துறைமுகம் செயல்பட்டு வருகிறது.இங்கு சரக்குகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்காக தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் 400 அடி சாலையும் மற்றொருபுறத்தில் சரக்கு தொடர்வண்டி இருப்புப் பாதையும் அமைப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குடியிருப்பு பகுதியின் ஒருபுறத்தில் சாலையும் மற்றொரு புறத்தில் சரக்கு தொடர்வண்டி இருப்புப் பாதை அமைக்கப்பட்டால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இத்திட்டத்திற்கு ஏற்கனவே காட்டுப்பள்ளி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், திங்களன்று (மே 20) 400 அடி சாலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்குவதற்காக பத்துக்கும் மேற்பட்ட மண் அள்ளும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மண்அல்லும் எந்திரங்களை சிறைபிடித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகளைத் தொடர முடியாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.